வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை கொல்கத்தா அணியிலிருந்து விடுவிக்கலாம் என பிசிசிஐ அறிவுறுத்தியிருக்கிறது.
அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள் இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள், அந்நாட்டு வீரர்கள் ஐ.பி.எல்-இல் விளையாடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில், வங்கதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை, ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 9 கோடியே 20 லட்சம் கொடுத்து வாங்கியது.
வங்கதேச வீரரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், பிசிசிஐ-யும் முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கொல்கத்தா அணிக்கு அறிவுறுத்தியிருப்பதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா ‘Times Of India’ ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார்.
“சமீபத்தில் நாடு முழுவதும் நடந்து வரும் சம்பவங்கள் காரணமாக, வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்குமாறு பிசிசிஐ கொல்கத்தா அணிக்கு அறிவுறுத்தியிருக்கிறது.
மேலும், மாற்று வீரர் யாரையாவது கேட்டால், அந்த முடிவுக்கு பிசிசிஐ அனுமதிக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.