வங்காளதேசம்: தொடர் கும்பல் தாக்குதலில் 3-வது இந்து மரணம்

டாக்கா,

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் மாணவர் போராட்டம் வெடித்தது. இதில், ஆளும் அரசு கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன், கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார்.

இதன் பின்னர், நோபல் பரிசு பெற்ற, பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் வங்காளதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. நாட்டின் தலைமை ஆலோசகராக யூனுஸ் செயல்பட்டு வருகிறார். கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களின் முக்கிய தலைவராக இருந்தவர்களில் ஷெரீப் உஸ்மான் ஹாதி (வயது 32) என்பவரும் ஒருவர்.

இவர் இங்குலாப் மாஞ்சா என்ற அமைப்பை நிறுவி அரசியலில் ஈடுபட்டார். தலைநகர் டாக்காவின் பிஜோய்நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். இந்நிலையில், சிங்கப்பூரில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சில நாட்களில் உயிரிழந்து விட்டார். டிசம்பர் மத்தியில் ஏற்பட்ட அவருடைய மரணம் தொடர்ச்சியாக வங்காளதேசத்தில் வன்முறை வெடித்தது.

இதில், முன்னாள் கல்வி மந்திரி மொகிபுல் ஹசன் சவுத்ரியின் வீடு கொளுத்தப்பட்டது. வங்காளதேசத்தின் நிறுவன தந்தையான ஷேக் முஜிபுர் ரகுமானின் வீடும் சூறையாடப்பட்டது. இந்திய துணைத்தூதரின் வீடு மீதும் கல்வீச்சு சம்பவம் நடந்தது.

இதன் தொடர்ச்சியாக அந்நாட்டில் வசிக்கும் இந்துக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு முதலில் பலியானவர் மைமன்சிங் நகரை சேர்ந்த திபு சந்திரதாஸ் (வயது 25) என்ற வாலிபர். துணி தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்த அவரை, மத நிந்தனை செய்து விட்டார் என கூறி அவருடைய ஆடைகளை களைந்து, நிர்வாணப்படுத்தி, ஒரு கும்பல் தொங்க விட்டது. பின்னர் கம்பத்தில் கட்டி வைத்து, அடித்து கொலை செய்தது. இதன்பின்னர் அவருடைய உடலை தீ வைத்து எரித்தது. இந்த கொடூர சம்பவத்திற்கு ஆளும் இடைக்கால அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

எனினும், வன்முறை கும்பலின் தாக்குதல் நிற்கவில்லை. இந்நிலையில், அந்நாட்டின் ஷரியத்பூர் நகரில் மருந்து மற்றும் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தவர் கோகன் சந்திர தாஸ் (வயது 50). புத்தாண்டு அன்று இரவில் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வரும் வழியில் மர்ம கும்பல் வழிமறித்து, ஆயுதங்களால் கடுமையாக தாக்கியது. பின்னர் அவர் மீது பெட்ரோலை ஊற்றி, தீயை வைத்தது.

எனினும், அவர்களிடம் இருந்து தப்பி அருகேயிருந்த குளத்தில் குதித்த அவரை, உள்ளூர்வாசிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு டாக்கா மருத்துவ கல்லூரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று பலியானார். இதற்கு முன்பு அம்ரித் மொண்டல் என்பவர் கும்பல் தாக்குதலில் பலியானார். அவர் கும்பல் தாக்குதலில் உயிரிழந்த 2-வது இந்து நபர் ஆவார். அவர் கும்பல் ஒன்றை நடத்தி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என கூறி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், வங்காளதேசத்தில் கும்பல் தாக்குதலில் 3-வது இந்து நபர் ஒருவர் மரணம் அடைந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என முகமது யூனுஸ் அறிவித்த சூழலில், வன்முறை பரவி வருகிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.