வெனிசுலா அதிபருக்கு எதிராக போதை பொருள் பயங்கரவாத சதி திட்ட வழக்கு பதிவு செய்த அமெரிக்கா

வாஷிங்டன் டி.சி.,

வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அமெரிக்காவுக்குள் வெனிசுலா அபாயகர போதை பொருட்களை கடத்துகிறது என்றும், நிக்கோலஸ் ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் டிரம்ப் கூறினார்.

அவர்கள் குற்றவாளிகளையும், சிறை கைதிகளையும், அவர்களுடைய போதை பொருள் கடத்தல் கும்பல்காரர்களையும் எங்களுடைய நாட்டுக்குள் அத்துமீறி நுழைய செய்கின்றனர் என டிரம்ப் குற்றச்சாட்டாக கூறினார். வேறு எந்த நாட்டையும் விட வெனிசுலாவில் இருந்தே லட்சக்கணக்கானோர் எங்களுடைய திறந்த நிலையிலான எல்லைக்குள் நுழைகின்றனர் என்றும் கூறினார்.

இதனை முன்னிட்டு அந்நாட்டுக்கு எதிராக கடுமையான தடைகளையும் விதித்து வருகிறார். இந்த நிலையில், மதுரோவின் சட்டவிரோத ஆட்சிக்கு வலு சேர்க்கும் வகையில், நிதி ஆதாரங்களை தொடர்ந்து வழங்க கூடிய சில எண்ணெய் கப்பல்களை நாங்கள் கண்டறிந்து உள்ளோம் என சமீபத்தில் கூறிய டிரம்ப், அந்நாட்டின் 4 எண்ணெய் நிறுவனங்களுக்கும், அதனுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பல்களுக்கும் புதிய தடைகளை விதித்து உத்தரவிட்டார்.

இதுபோன்ற கப்பல்களையே மதுரோவின் ஆட்சி அதிகம் சார்ந்து இருக்கிறது. அதன் வழியே வருவாயையும் ஈட்டி வருகிறது. அதனை கொண்டு அமெரிக்காவின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிக்கிறது என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.

அமெரிக்க நாட்டில் போதை பொருட்களை குவிக்கும் வேலையில் ஈடுபட்டு விட்டு, எண்ணெய் ஏற்றுமதி வழியே லாபம் பெற முயற்சிக்கும் சட்டவிரோத மதுரோவின் ஆட்சியை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என அமெரிக்க கருவூல துறை மந்திரி ஸ்காட் பெஸ்சன்ட்டும் அறிக்கை வழியே தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.

இந்த சூழலில், அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி இன்று கூறும்போது, நிக்கோலஸ், அவருடைய மனைவி சிலியா புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நிகோலஸ் மீது, அமெரிக்காவுக்கு எதிராக போதை பொருள் கடத்தல் சதி திட்டம், கொக்கைன் இறக்குமதி சதி திட்டம், இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுக்கான கருவிகளை பதுக்கி வைப்பதற்கான சதி திட்டம் ஆகிய வழக்குகள் பதிவாகி உள்ளன. அவர்கள் விரைவில் அமெரிக்க கோர்ட்டுகளில், அமெரிக்க மண்ணில், அமெரிக்க நீதியை பெறுவார்கள் என கூறியுள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.