ஓய்வை அறிவிக்கும் இந்த 2 முக்கிய வீரர்கள்… இனி இந்திய அணியில் இடமில்லை!

India National Cricket Team: டெஸ்ட் மற்றும் ஓடிஐ போட்டிகளுக்கு அடுத்த கொஞ்ச காலத்திற்கு ரெஸ்ட்… இனி சில மாதங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு முழுவதுமாக டி20 திருவிழாதான் இருக்கப்போகிறது. 

Add Zee News as a Preferred Source

குறிப்பாக, இந்திய அணி அடுத்து ஜன. 21ஆம் தேதி முதல் ஜன. 31ஆம் தேதிவரை நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் விளையாடுகிறது. அடுத்து பிப். 7ஆம் தேதி தொடங்கி, மார்ச் 8ஆம் தேதி வரை ஐசிசி உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கிறது. அடுத்து மார்ச் மாத இறுதியில் இருந்து மே மாத இறுதிவரை ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதனால், மே மாதம் வரை டெஸ்ட், ஓடிஐ போட்டிகளே இல்லை.

Team India: அடுத்த ஓடிஐ தொடர் எப்போது?

ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி20ஐ தொடருடன், 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடர் நடைபெற இருக்கிறது. இது இந்திய மண்ணில் நடைபெறுகிறது. அடுத்து இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரில் மோத உள்ளன. இதில் இருந்து 2027 ஐசிசி உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராக தொடங்கும். 

ஐசிசி உலகக் கோப்பை தொடர் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. அதுவும் 2027ஆம் ஆண்டின் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. வரும் ஜூன் மாதத்தில் இருந்து 15-16 மாதங்கள் தொடர்ச்சியாக இந்திய அணி ஓடிஐ போட்டிகளை விளையாடும் என்பதால் 2027 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை கட்டமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உலகக் கோப்பையில் விளையாடக்கூடிய வீரர்களுக்கு மட்டுமே அந்த ஒன்றரை வருடத்தில் இந்திய ஓடிஐ அணியில் வாய்ப்பும் கொடுக்கப்படும்.

Team India: ரோஹித், விராட் கோலிக்கு வாய்ப்பிருக்கு…!

ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் நிச்சயம் 2027 ஐசிசி உலகக் கோப்பை தொடர் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், இவர்கள் ஓடிஐ போட்டியில் மட்டுமே விளையாடுகிறார்கள், இதனால் குறைந்தளவிலான போட்டிகளிலேயே விளையாடுவார்கள். இவர்களின் உடற்தகுதி சீராக இருக்கும்பட்சத்தில் இவர்கள் 2027ஆம் ஆண்டு வரை விளையாடுவதில் சிக்கல் இருக்காது. ஐபிஎல் தொடர், விஜய் ஹசாரே கோப்பை உள்ளிட்ட தொடர்களில் விளையாடியும் பார்மை தக்கவைத்துக்கொள்ளலாம்.

Team India: இந்த 2 வீரர்களுக்கு இனி வாய்ப்பில்லை

ஆனால், இந்திய அணி விளையாடும் அடுத்த ஓடிஐ தொடரில் இனி இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது மிக மிக அரிதாகிவிடும். எனவே அவர்கள் ஓடிஐ போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. அந்த இரண்டு வீரர்கள் வேறு யாருமில்லை, சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும், வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியும் தான்… ஏன் இவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது அரிது?, இவர்கள் ஓய்வை அறிவிக்க ஏன் அதிக வாய்ப்புள்ளது? என்பதை இங்கு விரிவக காணலாம்.  

Team India: முகமது ஷமி

2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் முகமது ஷமிக்கு இந்திய அணியில் எந்த பார்மட்டிலும் வாய்ப்பளிக்கப்படுவதில்லை. ஆனால் அவர் தொடர்ச்சியாக ரஞ்சி கோப்பை தொடரிலும், சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரிலும், விஜய் ஹசாரே கோப்பை தொடரிலும் விளையாடி வருகிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 5 போட்டிகளில் 9 விக்கெட் எடுத்திருந்தார். சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் 7 போட்டிகளில் 16 விக்கெட், விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 7 போட்டிகளில் 15 விக்கெட், ஷமி 4 போட்டிகளில் 20 விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார்.  

ஆனாலும் தொடர்ச்சியாக இவருக்கு டெஸ்ட் மற்றும் ஓடிஐ போட்டிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. தற்போது ஓடிஐ போட்டிகளை பொருத்தவரை வேகப்பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் இருக்கிறார்கள். இதுவும் போக வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் தூபே உள்ளிட்டோரும் இருக்கிறார்கள். அடுத்து உலகக் கோப்பை வரும்போது 36 வயதை முகமது ஷமி எட்டியிருப்பார். தற்போதே அவர் முழு உடற்தகுதியுடன் இல்லை என நிராகரிக்கப்படும் வேளையில் அவருக்கு இனி இந்திய ஓடிஐ அணியில் வாய்ப்பு கிடைப்பது அரிது.

Team India: ரவீந்திர ஜடேஜா

ஜடேஜா கடந்த இரண்டு மாதங்களில் நடந்த தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஓடிஐ தொடர்களில் மொத்தமே 1 விக்கெட்டை மட்டுமே அடித்திருக்கிறார். தொடர்ச்சியாக பேட்டிங்கிலும் சொதப்பி வருகிறார். அதாவது, இதுவரை இந்தியா மண்ணில் ஓடிஐ போட்டிகளில் அவர் இரண்டு முறைதான் அரைசதம் அடித்திருக்கிறார். அதுவும் கடைசியாக 2013ஆம் ஆண்டில்தான் அவர் அரைசதம் அடித்திருக்கிறார். 

அதன்பின் இந்திய மண்ணில் அவர் அரைசதம் அடிக்கவே இல்லை. அவர் இத்தனை ஆண்டுகள் அவரின் விக்கெட் எடுக்கும் திறனுக்காகவே அணியில் தொடர்ந்தார். ஆனால், தற்போது அவரிடம் இருந்து பேட்டிங் தேவை அதிகம் உள்ளது. பேட்டிங்கில் அவர் பங்களிக்காவிட்டால் நிச்சயம் இந்திய அணியில் இடம் கிடைக்காது. ஜடேஜாவுக்கு பதில் அக்சர் பட்டேல் இந்திய அணியில் இனி சேர்க்கப்படுவார். பந்துவீச்சு, பேட்டிங்  என இரண்டிலும் அவர் சிறப்பான பங்களிப்பை அளிப்பார். ஆஸ்திரேலிய தொடரில் கூட அதுதான் நடந்தது. தென்னாப்பிரிக்காவில் உலகக் கோப்பை நடைபெற இருப்பதால் ஒரே ஒரு இடது கை ஸ்பின்னர் இந்திய அணிக்கு போதும். அது அக்சர் பட்டேல் மட்டும். எனவே இனி ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்காது. 

மேலும் படிக்க | இந்திய அணியின் அடுத்த ஒருநாள் தொடர்! இத்தனை மாதங்கள் இருக்கிறதா?

மேலும் படிக்க | இனி ரோகித் சர்மாவுக்கு அணியில் இடம் கிடைக்குமா? கம்பீரின் பிளான் என்ன?

மேலும் படிக்க | இந்திய அணி பயிற்சியாளராக கௌதம் கம்பீர்… இதுவரை செய்த ‘சம்பவங்கள்’ என்னென்ன?

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.