விதவிதமான இட்லி ரெசிப்பி: `ராமசேரி இட்லி' செய்வது எப்படி?

ராமசேரி இட்லி

தேவையானவை:

பச்சரிசி – ஒரு கப்

இட்லி அரிசி – ஒரு கப்

உளுத்தம்பருப்பு – கால் கப்

வெந்தயம் – சிறிதளவு

சாதம் – அரை கப்

உப்பு – தேவையான அளவு

ராமசேரி இட்லி

செய்முறை:

பச்சரிசி, இட்லி அரிசி இரண்டையும் மூன்று முதல் நான்கு மணி நேரம்வரை ஊறவைத்து அரைக்கவும். இதனுடன் சாதத்தையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். உளுத்தம்பருப்பு, வெந்தயம் இரண்டையும் ஒன்றாக ஊறவைத்து தனியாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் அரைத்துவைத்துள்ள அரிசி மாவு மற்றும் உளுந்து மாவு ஆகிய எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். பின்பு இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து முதல் நாள் இரவு ஊறவைக்கவும். பின்பு மறுநாள் இட்லிகளாக ஊற்றவும்.

இட்லி தயாரிக்கும் முறை:

வாய் அகன்ற சிறிய மண்பானை ஒன்றை எடுத்துக்கொள்ளவும். அதில் பாதியளவு நீர் நிரப்பி, பானையின் வாயில் ஈரப்படுத்திய இட்லி துணியைக் கட்டவும்.

பின்பு அதில் மாவை ஊற்றி அடுப்பில் வைத்து மூடி போட்டு வேகவைக்கவும். சிறிது நேரம் கழித்து கத்தியால் இட்லியை லேசாகக் குத்திப்பார்க்கவும். மாவு கத்தியில் ஒட்டாமல் இருந்தால் இட்லி வெந்துவிட்டது என்று அர்த்தம். இப்போது லேசாக நீர் தெளித்து துணியில் இருக்கும் இட்லியை எடுக்கவும். சட்னி, சாம்பாருடன் சூடாகப் பரிமாறவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.