சென்னை: இன்ஸ்டாவில் இளம்பெண்ணுக்கு ஆபாச வீடியோ – இளைஞரைத் தட்டித்தூக்கிய சைபர் க்ரைம் போலீஸ்!

சென்னை, போரூர் பகுதியில் 35 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மேலும் இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 12.12.2025-ம் தேதி அந்தப் பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு, மற்றொரு இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து ஆபாச மெசேஜ்கள், ஆபாச வீடியோக்கள், சம்பந்தப்பட்ட பெண்ணின் மார்பிங் வீடியோக்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்த அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தார். இந்தச் சூழலில் ஆபாச வீடியோக்களை அனுப்பியவர், `உன்னுடைய நிர்வாண வீடியோவை எனக்கு அனுப்பு, இல்லையெனில் இந்த மார்பிங் வீடியோவை உனக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைத்து விடுவேன்’ என மிரட்டி மற்றொரு மெசேஜ் அனுப்பியிருந்தார். அதற்கும் அந்தப் பெண் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

கைது
கைது

தொடர்ந்து முகம் தெரியாத ஒருவரால் மனரீதியாக பாதிக்கப்பட்ட இளம்பெண், மேற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து ஐ.பி., அட்ரஸ் குறித்த விவரங்களையும் சைபர் போலீஸார் சேகரித்தனர். அப்போது பெண்ணுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பியது திருவள்ளூர் மாவட்டம், காரம்பாக்கத்தைச் சேர்ந்த சேகர் (23) எனத் தெரியவந்தது. உடனடியாக அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோது, புகார் கொடுத்த இளம்பெண்ணின் உறவினர் ஒருவரை சேகர் காதலித்து வந்திருக்கிறார். இந்த காதல் விவகாரம் புகார் கொடுத்த இளம்பெண்ணுக்கு தெரியவந்திருக்கிறது. அதனால் தங்களின் காதல் விவகாரத்தை குடும்பத்தினரிடம் கூறிவிடுவார் என்ற பயத்தில் இளம்பெண்ணை மிரட்ட சேகர் இந்த படுபாதகச் செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு சேகரைக் கைதுசெய்த போலீஸார், அவரிடமிருந்து செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.