சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு: சென்னையில் நடிகர் ஜெயராமிடம் விசாரணை; சாட்சியாக மாற்ற முடிவா?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சபரிமலை கோயில் கருவறையின் முன்பகுதியில் இரு புறமும் உள்ள துவார பாலகர்கள் சிற்பம், திருநடை, கொடி மரம் உள்ளிட்டவைகளில் இருந்து தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

துவார பாலகர்கள் சிற்பத்தின் மீது பொதியப்பட்ட கவசங்கள் மற்றும் கருவறை திருநடை ஆகியவற்றில் செம்பு பொதியப்பட்டு அதன்மீது தங்கம் பூசப்பட்டுள்ளது. தங்கம் பூசும் பணி சென்னை ஸ்மார்ட் கிரியேசன்ஸ் நிறுவனத்தில் வைத்து நடந்துள்ளது.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

தங்கம் பூசப்பட்ட கோயில் திருநடை போன்றவை பல வி.ஐ.பிக்களின் வீடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பூஜைகள் நடத்தி அதற்காக பணம் வசூலிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில் நடிகர் ஜெயராம் வீட்டில் வைத்தும் கோயில் திருநடைகள் பூஜை செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னையில் உள்ள நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து அவரிடம் சிறப்பு விசாரணைக்குழுவினர் விசாரணை நடத்தினர். அதில் அவர் உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் ஏற்பட்ட பழக்கம் குறித்து தெரிவித்துள்ளார்.

சிறப்பு விசாரணைக்குழுவிடம் நடிகர் ஜெயராம் அளித்த வாக்குமூலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயராம் அளித்த வாக்குமூலத்தில், “சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தரிசனத்துக்குச் செல்லும்போது அங்கு வைத்து உன்னிகிருஷ்ணன் போற்றியைப் பார்த்தேன். அதிலிருந்து அவரிடம் பழக்கம் ஏற்பட்டது. பூஜைகளுக்காகப் பலமுறை அவர் எனது வீட்டுக்கு வந்துள்ளார்.

உன்னிகிருஷ்ணன் போற்றி மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அவரது பணப் பரிவர்த்தனைகளோ, மோசடி செயல்கள் குறித்தோ எனக்கு தெரியாது.

உன்னிகிருஷ்ணன் போற்றி
உன்னிகிருஷ்ணன் போற்றி

சபரிமலை கோயில் திருநடைகளுக்கு சென்னை ஸ்மார்ட் கிரியேசன்ஸ் நிறுவனத்தில் வைத்து பூஜைகள் நடத்தியபோதும் அதில் நான் கலந்துகொண்டேன். கோட்டயம் இளம்பள்ளி கோயிலில் இருந்து திருநடையை ஊர்வலமாக எடுத்துச் சென்றபோதும் அதில் நான் கலந்துகொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜெயராமைச் சாட்சியாக மாற்ற சிறப்பு விசாரணைக் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருநடை உபயமாக வழங்குவதாகக் கூறி உன்னிகிருஷ்ணன் போற்றி பலரிடம் பணம் வசூலித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது குறித்தும் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.