80களில் தொழில் நுட்ப பயிற்சியின் சந்தோஷ சங்கீதங்கள்! – ஜில் நினைவுகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடிவாரத்தில் உள்ள காந்திகிராமம், அம்பாத்துரையில் 46 ஆண்டுகளுக்கு முன்பு எங்களின் கல்விப் பயணம் தொடங்கியது. ஒரு மழைக் காலத்தில், ஆலமரத்தின் கிளையைத் தேடி வரும் பறவைகளைப் போல, நாங்கள் அனைவரும் அங்கே ஒன்றிணைந்தோம்.

ஆரம்பக்கால நாட்கள்

புதிய சூழல், வீட்டைப் பிரிந்த ஏக்கம் என ஆரம்பத்தில் எங்களில் பலருக்குக் கண்கள் கலங்கின. விடுதியில் அறைகள் பிரிக்கப்படாததால், நாங்கள் அனைவரும் பிரார்த்தனை கூடத்திலேயே ஒன்றாகத் தங்கினோம். அங்கே நிலவிய கடுமையான விதிமுறைகளும், ஒழுங்குமுறைகளும் ஆரம்பத்தில் எங்களுக்கு அச்சத்தைத் தந்தன. தூக்கமில்லாத இரவுகளையும், தனிமை உணர்வையும் கடந்த எங்களுக்கு, சீனியர் மாணவர்களின் வழிகாட்டுதல்களும், பழனியம்மாள் – சீனியம்மாள் ஆகியோரின் கைப்பக்குவத்தில் கிடைத்த உணவும் பெரும் ஆறுதலாக இருந்தன.

வகுப்புத் தோழிகளும் அவர்களின் தனித்துவமும்

சரளா அக்காவின் வருகைப் பதிவேட்டோடு தொடங்கிய எங்கள் வகுப்பறையில் மொத்தம் 33 தோழிகள் இருந்தோம். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான குணம் உண்டு.

அமராவதியின் விடாத சிரிப்பும், கை – கண் அசைவுகளும் எங்களை எப்போதும் உற்சாகப்படுத்தும். நீலா எல்லார் மடியிலும் குழந்தையாய் தவழும் குணம் கொண்டவள்.

மெட்டில்டாவின் மென்மையான பேச்சும், அகத்தியலட்சுமியின் தாயுள்ளமும், பாரதாதேவியின் கம்பீரமான பார்வையும் எங்களை வழிநடத்தின.

பிருந்தாவின் அழகான தோற்றமும், சுந்தரத் தெலுங்குப் பேச்சும், இந்திராணியின் படிப்பின் மீதான ஆர்வமும் இன்றும் நினைவில் நிற்கின்றன.

இன்று எங்களுடன் இல்லாத ஜெயக்குமாரி, கார்த்தி, மணிமேகலை மற்றும் ஜெயா ஆகியோரின் நினைவுகள் எப்போதும் எங்கள் மனதை வாட்டுகின்றன. அவர்களின் குடும்பப் பாசமும், பகிர்ந்து கொண்ட தருணங்களும் ஆயுசுக்கும் மறக்க முடியாதவை.

மல்லிகாவின் துறுதுறுப்பு, மதியின் ஆணித்தரமான பேச்சு, நாகராணியின் சிரிப்பு, பஞ்சாவின் நடனம் என எங்கள் குழு ஒரு கதம்ப மாலையாக இருந்தது. ராஜி என்பவள் உணவைப் பகிர்ந்து கொள்வதில் சிறந்தவள். ரேவதி, ரோஸி, சாந்தி, நிர்மலா என அனைவரும் ஒருவருக்கொருவர் பிணைக்கப்பட்ட அவிழா முடிச்சுகளாக மாறினோம்.

காலத்தின் ஓட்டம்

நாங்கள் அனைவரும் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்தாலும், காந்திகிராமம் என்ற நூலில் அழகிய பூக்களாக இணைந்தோம். 46 ஆண்டுகள் மிக வேகமாக உருண்டோடிவிட்டன. இன்று நாங்கள் அனைவரும் பணி ஓய்வு பெற்று, பல்வேறு திசைகளில் பறவைகளாகச் சிறகடித்து வாழ்ந்து வருகிறோம்.

மீண்டும் ஒரு சந்திப்பு

“படிப்பும் பணியும் முடிந்துவிட்டன, ஆனால் நட்பு இன்னும் முடியவில்லை” என்பதே உண்மை. திசைக்கொன்றாய் சிதறிக் கிடக்கும் நாம், மீண்டும் ஒருமுறை அந்த ஆலமரத்தடியில் எப்போது கைகோர்ப்போம் என்ற ஏக்கத்துடனேயே ஒவ்வொரு நாளும் நகர்கிறது. தோழிகளே, அந்த பொற்கால நினைவுகளை மீண்டும் ஒருமுறை நேரில் பகிர்ந்து கொள்ள நாம் அனைவரும் கூடும் நாள் எது?

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.