ஈரானை 37 ஆண்டுகளாக இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்த அயதுல்லா அலி கமேனியின் மரணத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ஈரான் அரசு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.
இதனைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள்கள் துக்க காலமும், 7 நாள்கள் தேசிய விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போது ஒட்டுமொத்த உலகின் பார்வையும் ஈரானின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியின் மீது விழுந்துள்ளது.

கமேனியின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் மோஜ்தபா (56) தலைவராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தப் பதவி பரம்பரையாகத் தொடருவதை கமேனி விரும்பவில்லை என்றும், மோஜ்தபா உயர்மட்ட மத குரு அல்ல என்பதால் அவருக்கு வாய்ப்பு குறைவு என்றும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், “ஈரானை வழிநடத்த சில நல்ல வேட்பாளர்கள் உள்ளனர்; அவர்கள் யார் என்று எனக்குத் தெரியும், ஆனால் இப்போது சொல்ல முடியாது” என அதிபர் ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், இஸ்ரேலுடன் சேர்ந்து, ஈரான் மீது 12 நாள் போரை அமெரிக்கா தொடங்கியபோது, உச்சத் தலைவர் தலைமறைவாக இருந்தபோது, அவருக்குப் பின் விரைவாக நியமிக்கப்படக்கூடிய மூன்று வேட்பாளர்களை அவர் பெயர் குறிப்பிட்டிருந்தார்.
1. ஈரானின் நீதித்துறைத் தலைவர் கோலம் – ஹொசைன் மொஹ்சேனி-எஜேய்.
2. கமேனியின் தலைமை அதிகாரி அலி அஸ்கர் ஹெஜாசி.
3. ஈரான் புரட்சியைத் தொடங்கிய ரூஹொல்லா கமேனியின் பேரன் ஹசன் கமேனி. இவர் சீர்திருத்தவாதக் கருத்துடையவராகப் பார்க்கப்படுகிறார்.

ஈரானின் அடுத்த தலைவரை 88 மத குருக்களைக் கொண்ட ‘நிபுணர்கள் குழு’தான் தேர்ந்தெடுக்கும். அந்தப் பட்டியலில் அயதுல்லா அலி கமேனியின் மகன் உட்பட சில வேட்பாளர்கள் இந்தப் பதவிக்கான சாத்தியமான போட்டியாளர்களாகக் கருதப்படுகின்றனர்.
அலிரேசா அராபி (67): கமேனிக்கு நெருக்கமானவர், நிபுணர்கள் குழுவின் துணைத் தலைவர். மத ரீதியாகப் பலம் வாய்ந்தவர் என்றாலும், ராணுவத்துடன் இவருக்கு நெருக்கம் குறைவு.
முகமது மெஹ்தி மிர்பாகேரி (60): அதீத பழமைவாதக் கருத்துடையவர். மேற்கத்திய நாடுகளைக் கடுமையாக எதிர்ப்பவர். “நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையிலான போர் தவிர்க்க முடியாதது” என்பது இவரது கொள்கை.
ஹாஷெம் ஹொசைனி புஷெஹ்ரி (60): நிபுணர்கள் குழுவின் முதல் துணைத் தலைவர். கமேனிக்கு மிகவும் விசுவாசமானவர் எனக் கருதப்படுபவர்.

ஹசன் கோமெய்னி (50): இஸ்லாமியக் குடியரசின் நிறுவனர் அயதுல்லா ருஹோல்லா கமேனியின் பேரன். அவர் புரட்சிகர சிந்தனையாளர். ஆனால் ஒருபோதும் அரசப் பதவியை வகித்ததில்லை. உயர்மட்ட அளவில் செல்வாக்கு குறைந்தவர்.
ஈரானின் அடுத்த தலைவர் வெறும் மதத் தலைவராக மட்டும் இல்லாமல், சக்திவாய்ந்த ‘புரட்சிகரக் காவல்படை’யை (IRGC) அரவணைத்துச் செல்பவராகவும், அமெரிக்காவின் தற்போதைய கடும் அழுத்தத்தைச் சமாளிப்பவராகவும் இருக்க வேண்டும்.
குறிப்பாக, ஹசன் கொமேனி போன்ற மிதவாதிகள் தலைவரானால் அது ஈரானின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.