‘zee5’ ஓடிடி தளத்தில் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான சீரிஸ் ‘தடயம்’. நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ள ‘தடயம்’ சீரிஸில், சமுத்திரக்கனி எஸ்ஐ அதியமான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அவருடன் ஷிவதா இன்ஸ்பெக்டர் லக்ஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த சீரிஸ் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.
இதனைக்கொண்டாடும் வகையில், படக்குழு ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தது.

அதில் கலந்துகொண்டு பேசிய சமுத்திரக்கனி “எல்லா மனசும் ஒரு வெற்றிக்காகத் தான் ஏங்கிக்கொண்டே இருக்கும். ‘தடயம்’ மூலம் கிடைத்த இந்த வெற்றி ஆழமாக மனசுக்குள் சென்று பல விஷயங்களை சரி செய்த மாதிரி ஒரு உணர்வைத் தருகிறது.
அதுதான் இந்த வெற்றியின் மகிழ்ச்சி. நான் சின்னத்திரையில் கிட்டத்தட்ட 3000 எபிசோடுகள் இயக்கியிருக்கிறேன். அத்தனை எபிசோடிலும் வாலில் வெடி கட்டிய மாதிரி ஓடிக் கொண்டே இருப்போம். ஆனால் ஜெயித்துவிட்டீர்கள் என்று சொல்லவே மாட்டார்கள். அந்த பயணத்தில் இவ்வளவு நேர்மையானப் பாராட்டுகளை கேட்கும் வாய்ப்பு அரிது. இன்று அந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது. அவரும், அஜய், நவீன், கேகே சார் உள்ளிட்ட பலர் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள்.
அனைவரின் உழைப்பும் சேர்ந்து தான் இந்த வெற்றியை கொடுத்திருக்கிறது. ஒரு அப்பாவிடம் இருந்து பிள்ளைக்கு கிடைக்கும் அங்கீகாரம் மிகப் பெரிய விஷயம். அந்த அங்கீகாரம் அஜய்க்கு இவ்வளவு சீக்கிரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
‘அப்பா’ படம் இயக்கும் சமயத்தில் பல ஆளுமைகளிடம் அவர்களின் அப்பா பற்றி பேச சொல்லி வீடியோ எடுத்தோம். அப்படி இயக்குநர் ப்ரியதர்ஷன் சார் சொன்ன போது, `எனக்கு சிபிஐ பணிக்காக நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள கடிதம் வந்தது.

அதே நாளில் பாசில் சாரிடம் உதவி இயக்குநராக சேர அழைப்பு வந்தது. லெட்டரை மடித்து தலையணை அடியில் வைத்துவிட்டு பாசில் சாரிடம் சேர்ந்தேன். ஒரு வாரம் கழித்து நேர்முகத்தேர்வு கடிதம் பற்றி தெரிந்த என் அப்பா, இனி என்னிடம் பேசாதே என்று சொல்லிவிட்டார்.
பல படங்கள் இயக்கியும், தேசிய விருதுகள் பெற்றும் என் அப்பா என்னிடம் பேசவில்லை. கடைசியாக பத்ம ஸ்ரீ விருது வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்ற போது, சாரிடா நீ சரியான பாதையை தான் தேர்வு செய்திருக்கிறாய் என சொல்லி தோளில் தட்டிக் கொடுத்தார். இது நடக்க 30 வருடம் ஆனது’ எனக் கூறினார் ப்ரியதர்ஷன். அது போல தகப்பன் ஒரு கனவில் இருக்கும் போது, அவரின் கனவை ஈடு செய்யும் வாய்ப்பு அமைவது பெரிய விஷயம்” என்று பேசியிருக்கிறார்.