நவீன இந்தியாவின் முன்னணி வரலாற்று ஆசிரியர்களில் ஒருவரும் காலடி ஸ்ரீசங்கராச்சார்யா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் கே.என்.பணிக்கர் (90) நேற்று காலமானார்.
ஸ்ட்ரோக் காரணமாக நேற்று மதியம் அவரை திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.யு.டி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். அங்கு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் அவர் மரணமடைந்தார்.
இன்று காலை 10 மணிக்கு அவரது உடல் கவடியாரில் உள்ள அவரது வீட்டில் பொது அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இன்று மாலை 4.30 மணிக்கு தைக்காடு சாந்தி மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
கே.என்.பணிக்கரின் மனைவி உஷா ஏற்கனவே மரணமடைந்துவிட்டார். இவர்களுக்கு ராகிணி, சாலினி என 2 மகள்கள் உள்ளனர். இந்திய மதச்சார்பின்மையின் பாதுகாவலராக அறியப்படும் கே.என். பணிக்கரின் 90-வது பிறந்தநாள் விழாவை கேரள வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் கொண்டாட முடிவுசெய்திருந்த நிலையில் அவரது மறைவு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவரது மறைவுக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
டாக்டர் கே.என். பணிக்கர் ஒரு கலாசார நாயகர். இந்தியாவின் பன்மைத்துவம் வரலாற்றின் போக்கின் மூலம் உருவானது என்றும், அதன் வீழ்ச்சி இந்தியாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் எழுத்து, பேச்சு மற்றும் கற்பித்தல் மூலம் மக்களுக்குத் தொடர்ந்து நினைவூட்டினார்.
வகுப்புவாதத்தின் கருமேகங்கள் மூடிய நேரங்களில் எல்லாம் இந்திய மதச்சார்பின்மையை சமூகத்தின் மனதில் பரப்பும் ஒளியாக கே.என்.பணிக்கரின் கருத்துகள் மாறின. இந்தியா என்றால் என்ன என்பதை ஆய்வு செய்து புதிய தலைமுறைக்கு வழங்கினார்.
வரலாறு மற்றும் கலாசார ஆய்வுகள் மூலம் இந்தியாவை வகுப்புவாதமாக்கும் முயற்சிகளை அவர் நேரடியாக எதிர்த்து போராடினார். எனவேதான் அவரையும், அவரது வரலாற்று ஆய்வுத் திட்டங்களையும் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் போன்ற வரலாற்று ஆய்வு நிறுவனங்களிலிருந்து விலக்கி வைக்கிறார்கள்.

சர்வதேச அரங்கில் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்களில் இவரும் ஒருவர். பாடத்திட்டங்களில் வகுப்புவாதத்தைப் புகுத்துவதற்கு எதிராகப் போராடுவதிலும், கலாசாரத் துறையைக் காவிமயமாக்குவதை எதிர்ப்பதிலும் இவரது பங்கு மிக முக்கியமானதாகும்.
காலடி சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் போன்ற உயர் பதவிகளை அலங்கரித்தார். இடதுசாரி அரசியலுக்கு எப்போதும் துணை நின்றவர். அவரது மறைவு இந்திய மதச்சார்பற்ற ஜனநாயக இயக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவுக்கு வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.