மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளில் 47 சதவீத பணிகள் மட்டும் முடிந்துள்ளது – ஆர்டிஐயில்வெளியான தகவல்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கபடும் என 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு 3 வருடங்கள் கழித்து மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்து மத்திய அமைச்சரவையிடம் அனுமதியும் பெறப்பட்டது. தொடர்ந்து நிலம் கையகப்படுத்துதல், நிர்வாக குழு அமைத்தல் போன்ற வேலைகள் முடிந்து கிட்டதட்ட 10 வருடங்கள் கழித்து கடந்த வருடத்திலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் தொடரப்பட்டு இன்று வரை நடைப்பெற்று வருகிறது.

இதனிடையே தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் மதுரை எய்ம்ஸ் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.

அதற்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தலைமை பொது தகவல் அலுவலர் தர்ம்பீர் குமார் சிங் அளித்த பதிலில், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 47 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது எனவும், மதுரை எய்ம்ஸ் மொத்த திட்ட மதிப்பீடு 2021.51 கோடி எனவும், 471.02 கோடி மத்திய  பட்ஜெட்டில் இருந்து மதுரை எய்ம்ஸ் க்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அக்டோபர் 2026 இல் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆர்டிஐ ஆர்வலர் பாண்டியராஜா

இது தகவல்கள் குறித்து  ஆர்டிஐ ஆர்வலர் பாண்டியராஜா கூறுகையில், “தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015 ல் அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் கழித்து தான் 22 மே 2024 அன்று கட்டுமான பணிகள் தொடங்கியது. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற உள்ள நிலையில் 47 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து உள்ளது.

மீதமுள்ள 53 சதவீத பணிகளை முடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகும். எனவே அவசரக் கதியில் மதுரையையும் மருத்துவமனையை திறக்கக் கூடாது. கட்டுமான பணிகளை முடிப்பதற்கு போதுமான அவகாசம் வழங்க வேண்டும். அப்போதுதான் கட்டுமானம் தரமானதாக அமையும்.

மதுரை எய்ம்ஸ் பணிகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயிலாமலேயே ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள் இறுதி ஆண்டு முடித்து  வெளியே செல்லும் நிலை உள்ளது. எனவே வரும் நாட்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி உதவி வழங்கும் ஜெய்கா நிறுவனத்திடம் இருந்து நிதி கிடைப்பதற்கு மத்திய அமைச்சரவை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.