குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த சுக்ராம் என்பவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அந்த நாய் அவருடன் கடந்த 14 ஆண்டுகளாக இருந்தது. அதன் மீது அதிக அன்பு வைத்திருந்தார்.
ஆனால் சமீபத்தில் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். சுக்ராம் தனது மனைவியின் ஆயுள் காப்பீட்டுத் தொகையான ரூ.17 லட்சத்தை அவரது கையெழுத்தைப் போலியாகப் போட்டு மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், கடந்த மாதம் சூரத் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 3 ஆண்டுகளாக இந்தத் தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மனைவியின் தரப்பில் கணவர் மீது துன்புறுத்தல் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. திடீரென சுக்ராமுடன் கடந்த 14 ஆண்டுகளாக இருந்த அவரது வளர்ப்பு நாய் இறந்து போனது.
இதையடுத்து அதன் இறுதிச்சடங்குகளைச் செய்ய தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சுக்ராம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இம்மனுவை அவசர மனுவாக எடுத்துக்கொண்டு விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், சுக்ராமைச் சில மணிநேரம் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் வீட்டிற்குச் செல்ல அனுமதி அளித்தது.
நீதிபதி தேசாய் தனது தீர்ப்பில், சுக்ராமை போலீஸ் பாதுகாப்புடன் அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டார். மேலும் போலீசார் சாதாரண உடையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அதோடு போலீஸ் பாதுகாப்புக்காக ஏற்படும் செலவை மாநில அரசே ஏற்க வேண்டும் என்றும், இறுதிச் சடங்குகள் முடிந்தவுடன் குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாக சிறைக்கு அழைத்து வர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சுக்ராம் சார்பாக கோர்ட்டில் ஆஜரான வழக்கறிஞர், நாய் சுமார் 14 ஆண்டுகளாக என் மனுதாரருடன் இருந்தார். செல்லப்பிராணியிடம் அவர் மிகவும் பற்று கொண்டு இருந்தார். எனவே அதன் இறுதிச்சடங்குகளைச் செய்ய வீட்டிற்குச் செல்ல அவர் விரும்புகிறார்.
10 ஆண்டுக்கும் மேலாக விலங்குடன் அவர் பகிர்ந்து கொண்ட உணர்ச்சிப் பிணைப்பைக் காரணம் காட்டி, மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுவிக்கவேண்டும்” என்று கோரி இருந்தார்.