தியாகராஜன் குமாரராஜாவின் ‘ஆரண்ய காண்டம்’ இந்த வாரம் ரீரிலீஸ் ஆகியிருக்கிறது.
முதல் ரிலீஸில் பெரியளவில் கொண்டாடப்படாத இத்திரைப்படத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு கல்ட் கிளாசிக் திரைப்படமாகக் கொண்டாடினார்கள் தமிழ் ரசிகர்கள்.
‘ஆரண்ய காண்டம்’ ரீரிலீஸை ஒட்டி, படத்தில் கொடுக்காப்புளி கேரக்டரில் நடித்திருந்த வசந்த்தைத் தேடிக் கண்டுபிடித்து பேட்டி கண்டோம்.

அவரை நாம் ‘வெயில்’, ‘பூவரசம் பீப்பீ’ போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகப் பார்த்திருப்போம்.
இப்போது வளர்ந்து ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்தப் பணியோடு, சினிமாவுக்கான முயற்சியிலும் மும்மரமாக ஈடுபட்டு வருகிறாராம்.
நம்மிடையே பேசிய வசந்த், “நான் மலையாளத்துல ‘ராகு கேது’ங்கிற ஒரு குறும்படத்துல நடிச்சிருந்தேன். அந்தக் குறும்படத்தை எடுத்தவர் இயக்குநர் பிஜாய் நம்பியார். அவர்கூட அந்தக் குறும்படத்துல சுதா கொங்கரா மேம் வொர்க் பண்ணினாங்க.
சுதா மேமும் குமாரராஜா சாரும் ப்ரண்ட்ஸ். அப்படி சுதா மேம் என்னைப் பத்தி குமாரராஜா சார்கிட்ட சொல்லியிருக்காங்க. அப்படித்தான் இயக்குநர் என்னை ‘ஆரண்ய காண்டம்’ படத்துக்கு தேர்வு பண்ணினார்.
‘ஆரண்ய காண்டம்’ படத்துல நடிக்கும்போது நான் 6வதுதான் படிச்சிட்டிருந்தேன். எல்லாமே எனக்கு அப்போ புதுசாகத்தான் இருந்துச்சு. ஷூட் தொடங்குறதுக்கு முன்னாடி கூத்துப்பட்டறையில என்னை ட்ரெயினிங் எடுக்கச் சொன்னாங்க.

குரு சோமசுந்தரம் சார் கூட நானும் கூத்துப்பட்டறைக்குப் போய் அவங்களைப் பார்த்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். ஆனா, குமாரராஜா சார் கூட வொர்க் பண்றது அவ்வளவு ஈஸி கிடையாது. கொடுக்காப்புளி கேரக்டரை அவர்தான் உருவாக்கினார்.
அவர் எனக்கு செய்து காட்டினதை நான் ரிப்பீட் பண்ணினேன். அவ்வளவுதான். குமாரராஜா சார் கூட வேலை பார்க்கிறது கஷ்டம்னு ஏன் சொல்றேனா… அவர் காட்சிகள் அனைத்தும் லைவ்வாக இருக்கணும்னு நினைப்பார்.
ஒரு சீன்லலாம் பயங்கரமா அவர்கிட்ட திட்டு வாங்கின அனுபவமும் இருக்கு” என ஹஸ்கி குரலில் சிரித்தவர், “ஒரு சீன்ல ஃப்ரேமுக்கு வெளில நிக்கணும்.
அவங்க சொன்னதுக்குப் பிறகுதான் நான் உள்ள வரணும். ஆனா, நான் தெரியாம சொல்றதுக்கு முன்னாடியே உள்ள வந்துட்டேன். அப்போதுதான் குமாரராஜா சார் டென்ஷனாகி ‘எவ்வளவு லாஸ் ஆகுது பாரு’னு திட்டினாரு.
நான் எவ்வளவு பெரிய தப்பு அப்போ பண்ணினேன்னு ஐந்து வருஷம் கழிச்சுதான் எனக்கு புரிஞ்சது. ஏன்னா, அது லாங் ஷாட். என்னுடைய தவறுனாலதான் அப்போ ஃபிலிம் கேன் வீணாகிடுச்சு. அதே மாதிரி இன்னொரு அனுபவமும் இருக்கு.
ஒரு சேஸிங் சீன்ல கேமரா என்னை ஃபாலோவ் பண்ணிட்டே வரும். குரு சோமசுந்தரம் சார் அவருக்கு ஷாட் இல்லைனு, அப்போ உதவி இயக்குநராக இருந்த அருண் மாதேஸ்வரன்கிட்ட ஜூஸ் குடிச்சிட்டு பேசிட்டிருந்தார். அதுவும் கேமராவுல பதிவாகிடுச்சு. இதெல்லாம் ஃபன்னி மொமண்ட்ஸ்!

ஷூட்டிங் நடக்கும்போது, நான் சின்ன பையன்கிறதுனால ஜாக்கி ஷெரஃப் சார், பி.எஸ். வினோத் சார் எவ்வளவு பெரிய ஆட்கள்னு எனக்கு தெரியாது. அவங்ககிட்டலாம் பாராட்டும் வாங்கியிருக்கேன்.
இதெல்லாம் இப்போ நினைச்சுப் பார்க்கும்போது ரொம்ப பெருமையாக இருக்கு” என்றவர், “‘ஆரண்ய காண்டம்’ மூலமாகத்தான் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது.
இதுக்குப் பிறகுதான் ஹலீதா ஷமீம் மேமோட ‘பூவரசம் பீப்பீ’ படத்துல நடிச்சேன். இயக்குநர் வசந்த் சாரும் என்னைப் பாராட்டி அவருடைய ‘மூன்று பேர் மூன்று காதல்’ படத்துல நடிக்க வச்சாரு” என்றார்.
“‘ஆரண்ய காண்டம்’ படத்துக்குப் பிறகு குமாரராஜா சாரை மீட் பண்ண சான்ஸ் கிடைக்கல. சில வருஷங்கள் கழிச்சு ஒரு ஃபங்ஷன்ல பார்த்தேன். ஆனா, அந்தப் படத்தோட உதவி இயக்குநர்கள்கிட்ட நான் இப்போவரைக்கும் டச்லதான் இருக்கேன்.
ஒரு விஷயம், ‘ஆரண்ய காண்டம்’ல நடிச்சவங்க எல்லோரும் ஒரு லைம்லைட்ல இருக்காங்க. நான் மட்டும் கொஞ்சம் மறைஞ்சுட்டேன். ‘பூவரசம் பீப்பீ’ படத்துக்கு நான் அவார்ட்லாம் வாங்கினேன். அதன் பிறகு, ‘ஆரண்ய காண்டம்’ல நடிச்ச சிறுவன்தான் நான் என யாருக்கும் தெரியல.

இப்போ என் முக அடையாளமே வேற மாதிரி மாறிடுச்சு” எனத் தொடர்ந்தவர், “எனக்கு சொந்த ஊர் மதுரை. ‘ஆரண்ய காண்டம்’ ரிலீஸ் ஆன சமயத்துல மதுரை தியேட்டர்ல பத்து பேர் கூட இல்ல.
ஆனா, இன்னைக்கு க்ளாசிக் படமாக அதை கொண்டாடுறாங்க. அப்போ பெரியளவுல படத்தை வரவேற்காதது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கு. இப்போதும் நடிப்பின் மீது ஆர்வமாக முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.
இப்போ ஒரு வெப் சீரிஸிலும் நடிச்சு முடிச்சிருக்கேன். சினிமாவைத் தாண்டி நான் இப்போ ஐடி-ல வொர்க் பண்ணிட்டும் இருக்கேன். வேலையோட சினிமாவையும் இப்போ பேலன்ஸ் செய்றேன்” என்றார்.