நாவலூர்: அதிகாலை நேர்ந்த கோரம்; சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 குழந்தைகள் பலியான சோகம்

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் பகுதியில் இன்று (மார்ச் 15) அதிகாலை குடியிருப்பு ஒன்றில் எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.

இந்த வெடிப்புச் சம்பவத்தின் வீரியம் காரணமாக அந்த வீடு முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. இந்தக் கோர விபத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தை தீரன் மற்றும் 4 வயது பெண் குழந்தை கிரீஷிகா ஆகிய இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கிப் பலத்த காயமடைந்த சஞ்சய் (31), சோனியா (26), சோனியாவின் தாயார் சித்ரா (46) மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரதீப் (7) என்ற சிறுவன் ஆகிய நால்வரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து
காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து

இந்த விபத்தில் மொத்தமாக மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சிலிண்டர் கசிவு காரணமாக இந்த விபத்து நேரிட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாவட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்தச் சம்பவம் நாவலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.