ஒரே நேரத்தில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்!

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் அருகிலுள்ள அழகிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தசேகர். பெயிண்டரான இவருக்கு திருமணமாகி, ஓர் ஆண் குழந்தை உள்ளது. ஆனந்தசேகர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவரை சரித்திரப் பதிவேடு பட்டியலில் சேர்த்து அவரது நடவடிக்கைகளை போலீஸார் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு, அவர் வசிக்கும் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 6, 7 மற்றும் 8 வயதுடைய 3 சிறுமிகளை மிரட்டி ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஆனந்த சேகர்

அதைத் தொடர்ந்து, அந்தச் சிறுமிகள் அழுது கொண்டே தங்கள் பெற்றோரிடம் கூறியிருக்கின்றனர். இது குறித்து அக்குழந்தைகளின் பெற்றோர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், ஆனந்தசேகரைக் கைதுசெய்தனர். இந்த வழக்கின் விசாரணை நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சுரேஷ்குமார், ’இது சமூகத்தில் நடைபெறும் அரிதினும் அரிதான வழக்கு’ எனச் சுட்டிக்காட்டினார்.

அவரது தீர்ப்பில், “மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்தசேகருக்கு எந்த விதமான அனுதாபமோ, கருணையோ காட்ட முடியாது. குற்றவாளியின் இந்தச் செயல் உச்சகட்ட கொடூர புத்தியை வெளிக்காட்டுகிறது. குடிபோதையில் செய்த தவறு என்பதை ஏற்க முடியாது. இது போன்ற தவறில் கருணை காட்டுவது போக்சோ சட்டத்தின் நோக்கத்தினை சிதைத்து விடும்.

நெல்லை நீதிமன்ற வளாகம்

அத்துடன், குற்றவியல் நீதி நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைத்து விடும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில், மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும்” எனக் குறிப்பிட்டதுடன், தூக்கு தண்டனை விதித்தார். இதில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.56 ஆயிரம் அபராதமும் மேலும் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் அரசு சார்பில் தலா ரூ.7 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.