தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: 5 பேரின் டிஎன்ஏ சேகரிப்பு- `காவல்துறை மீது நடவடிக்கை..' – நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி,  கடந்த 10-ம் தேதி  மாலை சுமார்  6 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக, வீட்டின் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றார். நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் மதியம் சுமார் 2 மணியளவில் அந்த மாணவி கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார். தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இத்தனிப்படையினர்  சம்பவம் நடந்த இடம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளாத்திகுளம்

இந்த வழக்கில் மாணவியுடன் படித்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட சந்தேகப்படும் வகையிலான 20-க்கும் மேற்பட்ட நபர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்களிடமிருந்து பல்வேறு கோணங்களில் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் முக்கிய குற்றவாளிகளைக் கைதுசெய்ய முடியாமல் போலீஸார் திணறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவி, மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்ட வழக்கில் 6 நாள்கள் ஆகியும் கொலையாளிகள் குறித்த துப்பு துலங்கவில்லை.

இந்த நிலையில், இந்த வழக்கினை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அ.தி.மு.க தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று (16-ம் தேதி) நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் ஆகியோர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மாணவிக்கு நன்கு தெரிந்த நபரே இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். மாணவியின் வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவிலேயே அவரின் உடல் மீட்கப்பட்டது. தற்போது சந்தேகப்படும் 5 நபர்களின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வக பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. செல்போன் டவர்கள்  செல்போன் அழைப்புகளை பரிசோதனை செய்து கண்காணித்து வருகிறோம்.

ஊர்மக்கள் சாலை மறியல்

அருகிலுள்ள சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு சந்தேகத்துக்கிடமானவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர்.  இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “மாணவி காணவில்லை என்பது முக்கியமான புகார். அதில் காவல்துறையினர் அலட்சியத்துடன் செயல்பட்டிருக்கக் கூடாது. காவல்துறையினர்  அப்போதே புகாரை பெற்று ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தால் இந்த விவகாரம் இவ்வளவு தூரம் போயிருக்காது. நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவியின் பெற்றோர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். வாக்குமூலத்தை வீடியோ, ஆடியோவாக பதிவுசெய்ய வேண்டும். இந்த வழக்கினை காவல்துறையினர் அறிவியல் பூர்வமாக விசாரிக்க வேண்டும்” எனக் கூறி, இந்தக் கொலை வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.