தி.மு.க கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நீடித்தன. சுமார் 4 சுற்று பேச்சுவார்த்தைகள் வரை நடந்தும் முடிவு எட்டப்பட்டாமல் இருந்தது.
இந்நிலையில் தி.மு.க தருவதாக சொன்ன 5 சீட்டுக்கே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புக்கொண்டு கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் “தி.மு.க-வுடனான முதற்கட்டப் பேச்சுவார்த்தையின்போது எங்களுக்கு 4 இடங்கள் தருவதாகச் சொன்னார்கள்.

ஆனால் 6 இடங்களை பெற்றுவிட வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். இரண்டு, மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையிலேயே 5 சீட்டுக்கு ஏறி வந்தது தி.மு.க. நாங்களும் அதனை ஏற்றுக் கொள்ளலாம் என முடிவெடுத்தோம்.
ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் கையெழுத்துப் போட வேண்டாம் என எங்களை கேட்டுக் கொண்டர்கள். ஆகவே இழுபறியாகிவிட்டது. எவ்வளவு மல்லுகட்டினாலும் 6 தொகுதிகள் தர அவர்கள் தயாராக இல்லை என்பதால் கையெழுத்துப் போட்டுவிட்டோம்” என்றனர்.
தி.மு.க கூட்டணி அமைந்ததிலிருந்து சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய இருவருக்குமே ஒரே எண்ணிக்கையில்தான் சீட் தரப்பட்டிருக்கிறது. ஆனால் 5 சீட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஓகே சொல்லிவிட்ட நிலையில் சி.பி.எம் மாநிலச் செயலாளர் சண்முகம் என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீனியர்களிடம் பேசினோம், “5 சீட் தான் தர முடியும் என திட்டவட்டமாக சொல்லிவிட்டது தி.மு.க, ஆனால், சண்முகம் தோழரும், முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தோழரும் 6 சீட் இல்லாமல் கையெழுத்துப் போடக் கூடாது என கறார் காட்டுகிறார்கள்.
ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தி.மு.க தரப்பு தயாராக இல்லை. எனவே 5 சீட்டில் முடியவே வாய்ப்புகள் இருக்கிறது. இதை ஏற்க மாட்டோம் என மாநிலச் செயலாளர் சொன்னால் உறுதியாக வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்க கூடிய தொகுதிகளை நம்மிடம் தள்ளிவிடுவார்கள் என்ற அச்சம் கட்சிக்குள் எழுந்திருக்கிறது” என்றனர்.