தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: செயின் பறிப்பு டு மூதாட்டி வன்கொடுமை – கைதானவரின் அதிர்ச்சி பின்னணி

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி லிங்கம்மாள். இவர்களுக்கு தர்ம முனீஸ்வரன், ஈஸ்வரன், அழகு முனீஸ்வரன் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இதில், தர்ம முனீஸ்வரன், பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சொந்த ஊர் பகுதியில் சிறு சிறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். திருமணமாகியும் அதையே தொடர்ந்துள்ளார். இதனால், தர்மமுனீஸ்வரனின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.

கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன்

இந்த நிலையில், அவருக்கு கீழஈராலைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஊர்களில் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 19.08.2018-ல் விருதுநகர் மாவட்டம், நரிக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் செயினை பறித்துச் சென்றுள்ளார்.

2019-ல் நரிப்பையூரில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணை தாக்கி செயின் பறித்துச் சென்றுள்ளார். இதே போன்று, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பல செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். 2019-ல் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறையில் இருந்தார்.     

தான் பறித்து வந்த அனைத்து செயின்களையும் தன்னுடன் தொடர்பில் இருந்த ஈஸ்வரி மற்றும் அவரது தாய் லூர்தம்மாளிடமும் கொடுத்து அடகு வைத்து பணம் பெற்று வந்துள்ளார். கடந்த 2020-ல் தூத்துக்குடி, தெர்மல்நகர் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட ஒரு பெண்ணிடம் செயின் பறிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு பொதுமக்கள் விரட்டவே அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அதே நாளில் சாயல்குடியில் ஒரு பைக்கை திருடி விட்டு ஊருக்குள் வலம் வந்தவர், பிப்ரவரி 6-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட் தர்ம முனீஸ்வரன்

இதற்கிடையே கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி எட்டயபுரம் அருகே ஒரு மூதாட்டி, அவரது நிலத்தில் பருத்தி எடுக்கச் சென்றபோது அவரை மிரட்டி வன்கொடுமை செய்துவிட்டு கொலை செய்ததுடன் அவர் அணிந்திருந்த கம்மல்களை கழட்டிச் சென்றுள்ளார். ஆனால், ஒரு பைக் திருட்டு வழக்கில் அவர் கைது செய்யப்பட்ட போதுதான் மூதாட்டியை அவர் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரிய வந்தது.

இந்த வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 6.8.2024-ல் அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பினை எதிர்த்து  சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அப்பீல் செய்து ஜாமீனில் வெளி வந்த நிலையில்தான் வேடநத்தம் பள்ளி மாணவியை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

இந்த கொலைச் சம்பவத்திற்கு முன்பு பார்த்திபனூரைச் சேர்ந்த ஒருவரின் பைக்கினை திருடி வந்துள்ளார்.

பைக்கில் செல்லும் சி.சி.டி.வி காட்சி

இந்த பைக்கில் தூத்துக்குடி நீதிமன்றம், குளத்தூர், குறுக்குச்சாலை டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று வந்துள்ளார். கொலைச் சம்பவம் நடந்த இடத்திற்கு பைக்கில் சென்று வந்த போதுதான் இப்பகுதியில் உள்ள காற்றாலை நிறுவனத்தின் சி.சி.டி.வி கேமராவில் சிக்கியுள்ளார். மொத்தத்தில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் மீது 32 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.   

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.