"அவர் இங்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து உடனே வந்தேன்" – சிபிஎம் அலுவலகத்தில் வைகோ; பின்னணி என்ன?

திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுப்பறி நீடித்து வருகிறது. இந்தச் சமயத்தில் இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்றார்.

‘இது சுமூக பேச்சுவார்த்தைக்கான முயற்சியோ’ என்று அரசியல் களத்தில் பேச்சு ஒன்று எழுந்தது. இதற்கு வைகோவே பதிலளித்துள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வைகோ, “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் காம்ரேட் பேபி மாநிலங்களவையில் எனக்கு சக உறுப்பினர் மட்டுமல்ல.

என் மீது எல்லையற்ற வாஞ்சையும், அன்பும் கொண்டிருப்பவர்.

M A பேபி
M A பேபி

அண்மையில் நான் திருவனந்தபுரம் சென்றிருந்தேன். நாடாளுமன்ற இரு அவைகளிலும் நான் ஆற்றிய ஆங்கில உரைகளைத் தொகுத்து அதற்கு அணிந்துரை வழங்க கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்தேன்.

அப்போது விமான நிலையத்திற்கே தொழிற்சங்கத் தலைவர்களையும், சட்டமன்ற உறுப்பினரையும் அனுப்பி, நானும், என்னோடு வந்தவர்களும் அரசு விடுதியில் தங்க ஏற்பாடு செய்திருந்தார் பேபி.

ஒற்றுமை

எனக்கும், அவருக்கும் ஒரு ஒற்றுமை. பழைய பாடல்களைக் கேட்பது எனக்கும், அவருக்கும் பொழுதுபோக்கு.

இப்போது கூட, அவருடன் உணவருந்தும் போது, பாசமலர், திருவிளையாடல், பாவ மன்னிப்பு போன்ற திரைப்படங்களின் பாடல்களைக் கேட்டோம்.

‘செம்மீன் பாடல்களைக் கேட்போம்’ என்று கூறினேன். அதையும் கேட்டோம். எங்கள் இருவருக்கிடையில் அப்படிப்பட்ட நட்பு.

அதனால், அவர் இங்கு வந்திருக்கிறார் என்பதை தொலைகாட்சியில் பார்த்தேன். உடனே புறப்பட்டு வந்தேன்.

வைகோ
வைகோ

அவர்கள் முக்கியமான கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் அவரைச் சந்திக்க வந்தேன்.

தேர்தலுக்குப் பிறகு இங்கு வரும்போது, வீட்டிற்கு விருந்து சாப்பிட வர வேண்டும் என்று அழைத்தேன். அதன் பின், அவர் கூட்டத்திற்குச் சென்றுவிட்டார். இதுதான் நடந்தது. இதைத் தவிர, மார்க்சிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்திற்குள் எந்த அரசியலையும் பேசமாட்டேன்”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.