பரத் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
அப்படத்தைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார்கள்.

இயக்குநர் ஶ்ரீ செந்தில் இயக்கியிருக்கும் இந்த இரண்டாம் பாகத்தில் பவானி ஶ்ரீ, ‘பூவே உனக்காக’ சங்கீதா, அபர்ணதி எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய நடிகை சங்கீதா பேசுகையில், “இங்கு எல்லோரையும்விட நான்தான் சந்தோஷமாக இருக்கேன். ஏன்னா, எனக்கு ரொம்ப பிடிச்ச தமிழ் சினிமாவுல 25 வருஷம் கழிச்சு ஒரு படம் பண்ணியிருக்கேன்.
இத்தனை வருஷம் வீட்டுல கம்போர்டாக இருந்து பழகிட்டேன். ஆனா, அதுல இருந்து வெளில வரணும். மீண்டும் நடிக்க வரும்போது, தயாரிப்பாளர்கள் எனக்கு எவ்வித அசௌகரியங்களையும் ஏற்படுத்தல.
இந்தப் படத்தோட போட்டோஷூட்டுக்கு முதல் முறையாக வரும்போது இறுக்கமாகவேதான் வந்தேன்.

எல்லோருமே எனக்கு சீனியர்ஸாகதான் தெரிவாங்க. படத்தின் லாஸ்ட் ஷாட் எடுக்கும்போது, பரத், ‘எனக்கு பஸ்ஸுக்கு டைம் ஆகுது’னு சொல்லிட்டு இருந்தாரு, நான் பஸ்ஸுக்கு லேட் ஆகுதானு சந்தேகத்தோட கேட்டேன்.
அவர், ‘ஆமா, எனக்கு நாளைக்கு கிரிக்கெட் மேட்ச் இருக்கு. பஸ்ல போய் கோயம்பேடுல இறங்கி, வீட்டுக்குப் போயிடுவேன்’னு சொன்னாரு. அந்தளவுக்கு டவுன் டு எர்த் பர்சன் அவர். எனக்கு இது முதல் படம் மாதிரியான ஃபீல்தான் கொடுக்குது.” என்றார்.