தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் பாஜக முத்திரை! – வலுக்கும் கண்டனங்கள்

கேரளாவில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து வெளியான ஒரு அறிக்கையில் பாஜகவின் முத்திரை பதிக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்த நிலையில், தேர்தல் ஆணையம் இதை வெறும் அலுவலக கவனக்குறைவு (clerical error) என்று விளக்கியுள்ளது.

2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வேட்பாளர்களின் குற்றப் பின்னணி தொடர்பான வழிகாட்டுதல்கள் குறித்து விளக்கம் கோரி, பாஜக கேரளா அலுவலக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதற்குப் பதிலாக தேர்தல் ஆணையம் கேரளாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பியது. ஆனால் அந்தக் கடிதத்தில் பாஜக கேரளா அலுவலகத்தின் முத்திரை பதிந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கேரளா தலைமை தேர்தல் அதிகாரி ரதன் யு. கெல்கர் வெளியிட்ட அறிக்கையில், “வேட்பாளர்களின் குற்ற பின்னணியை வெளியிடுவது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம், கடந்த 2019-ல் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. அந்த நெறிமுறைகள் பற்றிய விளக்கம் கேட்டு சமீபத்தில் கேரள பாஜக, மாநில தேர்தல் ஆணையத்த்தில் கடிதம் கொடுத்திருந்தது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை
தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை

அத்துடன் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் ஆணையம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய உத்தரவின் நகலையும் இணைத்திருந்தனர். அதில் பாஜகவின் முத்திரை இடம்பெற்றிருந்தது. ஆனால் பாஜகவின் முத்திரை இருப்பதை கவனிக்காமல் தேர்தல் அதிகாரி அனுப்பியிருக்கிறார்” என்று விளக்கமளித்துள்ளார்.

பிழைக்கு காரணமான அலுவலக அதிகாரி விசாரணைக்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.