ரிமோட் கன்ட்ரோல் பாம்பு, புலித்தோல், 150 முறை வெளிநாடு பயணம் – 58 பெண்களை ஜோதிடர் ஏமாற்றியது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த அசோக் கராட் என்ற ஜோதிடர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார். அவர் தன்னிடம் வரும் பெண்களிடம் உணர்வுபூர்வமாக, கணவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஒரு வித பயத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு போதைப்பொருள் அல்லது வயாகரா ஜூஸ் கலந்த பானத்தை குடிக்க கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.

கர்ப்பமான பெண்களை கூட விட்டுவைக்காமல் குழந்தை நலமுடன் பிறக்க பூஜை செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இது தொடர்பாக ஒரு கர்ப்பிணி பெண் அசோக்கிற்கு எதிராக கொடுத்துள்ள புகாரில், தனது கணவரை அறைக்கு வெளியில் நிறுத்தி வைத்துவிட்டு பூஜை என்ற பெயரில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று தெரிவித்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தல், பாலியல் தொல்லை, பாலியல் வன்கொடுமை தொடர்பாக மேலும் பல பெண்கள் தொடர்ந்து ஜோதிடருக்கு எதிராக புகார் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அமானுஷ்ய அலுவலகம்

கேப்டன் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அசோக்கிடம் போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் அவர் பெண்களை எப்படி மயக்கினார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ”மூடநம்பிக்கை மற்றும் பயத்தை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தி நூற்றுக்கணக்கானோரை தனது வலையில் விழவைத்துள்ளார். அசோக்கின் அலுவலகம் அமானுஷ்ய அதிர்வை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரிமோட் கன்ட்ரோல் பாம்பு

அதோடு அசோக் ஹிப்னாடிசம் போன்ற வேலைகளையும் செய்துள்ளார். தனது சொல்படி நடந்து கொள்ளாதவர்களிடம் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்தி இருக்கிறார். தனது அலுவலகத்தில் ரிமோட் கன்ட்ரோல் பாம்புகளைப் பயன்படுத்தி தனக்கு அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்களை நம்பவைத்தார். புலித் தோல்கள் மற்றும் பிற வனவிலங்கு கலைப்பொருட்களை தனது அலுவலகத்தில் வைத்து பாதிக்கப்பட்டவர்களை பயமுறுத்துவது போன்ற வேலையில் ஈடுபட்டார்.

மேலும் சிலரிடம் ஆசிர்வதிக்கப்பட்டது என்று கூறி புளிக்கொட்டைகளை அதிக விலை கொடுத்து வாங்க வைத்துள்ளார். வாடிக்கையாளர்களின் நிதிநிலையை நன்கு தெரிந்து கொண்டு அதற்கு தக்கபடி வெறும் ரூ.100 மதிப்புள்ள பொருட்களை ரூ.10 ஆயிரம் முதல் ஒரு லட்சத்திற்கு வாங்கும்படி செய்துவிடுவார். அவர் தனது வாடிக்கையாளர்களிடம் தெய்வீக குணப்படுத்தும் சக்தி இருப்பதாகக் கூறி போலி ரத்தினக் கற்களை வாங்கும்படி கூறி ஏமாற்றினார்.

150 முறை வெளிநாட்டு பயணம்

பொதுமக்களிடம் மோசடியாக சம்பாதித்த பணத்தில் அசோக் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார். தென்கொரியாவிற்கு தனது குடும்பத்தோடு சென்ற வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி இருக்கிறது. மொத்தம் 150 முறை வெளிநாடுகளுக்கு சென்று வந்து இருக்கிறார்”என்று தெரிவித்தனர்.

அசோக் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை குழு இஷானேஷ்வர் மகாதேவ் கோயிலின் அறக்கட்டளையுடன் தொடர்புள்ளதைக் கண்டறிந்து அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறது. நாசிக் அருகில் உள்ள மிர்கானில் இருக்கும் மகாதேவ் கோயிலை நடத்தும் அறக்கட்டளை தலைவராக அசோக் இருக்கிறார்.

அசோக்கிற்கு சொந்தமாக பண்ணை வீடும், பங்களாவும் இருக்கிறது. அவர் மகாராஷ்டிரா முழுவதும் 50க்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அசோக்கிற்கு மகாராஷ்டிரா பெண்கள் கமிஷன் தலைவர் ரூபாலியுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து ரூபாலி பெண்கள் கமிஷன் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.