தவெகவின் சென்னை எழும்பூர் தொகுதி வேட்பாளராக கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகனை விஜய் உறுதி செய்திருக்கிறார். இந்நிலையில், எழும்பூர் தொகுதியில் இன்று முதல் பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தார் ராஜ்மோகன். செங்கோட்டையன், ஜே.சி.டி.பிராபகர், ஆதவ் அர்ஜூனா மற்றும் மாவட்டச் செயலாளர் பூக்கடை குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன் பேசியதாவது,’அமைச்சராக இருந்த போது எழும்பூருக்கு பல பேருந்துகளை விட்டிருக்கிறேன். எழும்பூர் தவெகவின் எஃகு கோட்டையாக மாறியிருக்கிறது. அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கிய போது திரைப்படம் போல 100 நாட்கள்தான் என்றார்கள்.
ஆனால், இறக்கும் வரைக்கும் எம்.ஜி.ஆர் தான் முதல்வர். அதேமாதிரி, நாளைய தமிழகத்தை மாற்றக்கூடிய முதல்வராக விஜய் வருவார். கூட்டணி இல்லை என்றார்கள். நரிகள்தான் கூட்டமாக வரும். சிங்கம் தனியாகத்தான் வரும். என் உயிர் மூச்சு உள்ள வரை தளபதியை முதல்வராக்குவதுதான் என் லட்சியம். ஊழலற்ற ஆட்சியை உருவாக்கும் வல்லமை நம்முடைய தலைவருக்கு மட்டுமே உண்டு. ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கே நமக்கு 60% வாக்குகள் கிடைத்துவிடும்.

விஜய் எப்போது பிரசாரத்துக்கு வருவார் என மக்கள் காத்திருக்கின்றனர். தலைவர் பெரம்பூரிலிருந்து புறப்படுவார். சரித்திரம் படைப்பவர். தலைவர் பார்த்த மாத்திரலேயே, ‘வாங்க ராஜ்மோகன்…’ என தோளில் தட்டி பேசக்கூடியவர் ராஜ்மோகன். அவர் எழும்பூரில் மாபெரும் வெற்றி பெறுவார்.” என்றார்.