'தொடர்ந்து தோற்பவன் என கேலி செய்வது இதயத்தை நொறுக்குகிறது' மேடையில் கண்ணீர்விட்ட காங்கிரஸ் வேட்பாளர்

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயம்குளம் சட்டமன்ற தொகுதி கடந்த நான்கு தேர்தல்களில் தொடர்ச்சியாக சி.பி.எம் வசம் உள்ளது. அதற்கு முன்பும் பலமுறை சி.பி.எம் வென்றுள்ளது. இந்த தேர்தலில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த சிட்டிங் எம்.எல்.ஏ யு.பிரதீபா மீண்டும் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மாநில துணைத்தலைவர் எம்.லிஜூ போட்டியிடுகிறார். இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ​​காயம்குளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.லிஜு மேடையில் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. தேர்தல்களில் தொடர்ச்சியாக தோல்வியடைவதால் தன்னை பலரும் கேலியாக பேசுவதாகவும், அந்தப் பேச்சு இதயத்தை நொறுக்குவதாகவும், தனிப்பட்ட முறையில் மனச் சோர்வை ஏற்படுத்துவதாகவும் அவர் பேசியுள்ளார். 

காயம்குளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.லிஜூ கண்ணீர்மல்க பேசினார்

காங்கிரஸ் வேட்பாளர் எம்.லிஜூ காயம்குளம் தொகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடையில் பேசுகையில், “நான் எப்போதும் தோற்றுக்கொண்டே இருக்கிறேன் என்று மக்கள் சொல்வதைக் கேட்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. தோல்வியடைபவன் என எதிர் கட்சியினர் கிண்டலடிப்பது இதயத்தை நொறுக்குகிறது. அவர்கள் கேலி செய்வது என்னை தனிப்பட்ட முறையில் சோர்வடையச் செய்கிறது. ஆனால் அந்தத் தோல்விகளுக்காக நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. மக்கள் அளிக்கும் தீர்ப்பை நான் மதிக்கிறேன். 

மேடையில் பேசிய எம்.லிஜூ

ஏற்கனவே மூன்று முறை நான் போட்டியிட்டு தோல்வி அடைந்தேன். இப்போது நான்காவது முறையாக நான் போட்டியிடுகிறேன். மீண்டும் உங்கள் முன் நிற்கிறேன். எனக்கு ஒரு வாய்ப்பினைத் தாருங்கள் என நான் மக்களிடம் வேண்டுகிறேன். அரசியல் பிரமுகர் என்ற நிலையில் துக்கம் அனுபவிக்கும் மக்களை தேடிச்சென்று அவர்களின் கண்ணீரை துடைக்க வேண்டும் என விரும்புகிறேன். காயம்குளம் தொகுதி மக்களுக்காக பணியாற்ற வாய்ப்பு தாருங்கள் என நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருணையையும், அங்கீகாரத்தையும் வேண்டுகிறேன்” என அவர் கண்ணீர் மல்க வார்த்தைகள் உடைந்த நிலையில் பேசி பார்வையாளர்களின் மனதை கரைய வைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.