13 ஆண்டுகள் கோமா; கண்ணியமாக இறக்க அனுமதித்த உச்ச நீதிமன்றம் – விடைபெற்றார் ஹரிஷ் ராணா!

சண்டிகரில், 2013ம் ஆண்டு கல்லூரிக் கட்டடத்தின் 4வது மாடியிலிருந்து கீழே விழுந்த ஹரிஷ் ராணா என்பவருக்கு மூளையில் காயம் ஏற்பட்டது. அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் அவர் தொடர்ந்து கடந்த 13 ஆண்டுகளாக படுத்தப் படுக்கையாக கோமா நிலையில் இருந்தார். அவர் உடலில் எந்த வித அசைவும் இல்லை. அவருக்கு செயற்கையான முறையில் உணவு வழங்கப்பட்டு வந்தது. ஆனாலும் கடந்த 13 ஆண்டுகளாக அவரை அவரது வயதான பெற்றோர் கவனித்துக்கொண்டனர். மேற்கொண்டு தங்களால் தங்கள் மகனைப் பார்த்துக்கொள்ள முடியாது என்றும், தங்களது இறுதிக்காலத்திற்குப் பிறகு அவரை கவனிக்க யாரும் இல்லை என்றும் கூறி, தங்கள் மகன் கண்ணியமான முறையில் இறப்பதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கோரி, ராணாவின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த 11-ம் தேதி ராணாவிற்கு வழங்கப்பட்டுள்ள செயற்கை உபகரணங்களை அகற்றி, அவர் கண்ணியமான முறையில் இறக்க அனுமதிக்கும்படி உத்தரவிட்டது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ராணா கண்ணியமான முறையில் தனது உயிரை விட தேவையான வழிகளை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அவரை எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்தனர். நீதிபதிகளின் உத்தரவுப்படி ராணாவிற்கு கொடுக்கப்பட்டு வந்த செயற்கை உணவு மற்றும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் உடல்நிலை நேற்று மாலை மோசமடைந்தது.

இதையடுத்து அவரது மரணம் நேற்று மாலை இயற்கையாகவே நிகழ்ந்தது. “நாங்கள் அவருக்கு வேறு எதுவும் செய்யவில்லை. அவரை உயிர் பிழைக்கவைக்க எந்த வித முயற்சியும் செய்யவில்லை. அனைத்துமே இயற்கையாக நடந்தது” என்று எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். ராணா உயிர் பிரியும்போது அவரது குடும்பத்தினர் உடன் இருந்தனர். இந்தியாவில் இது போன்று நோயாளி ஒருவர் உயிரிழக்க அனுமதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதன்முறையாகும். சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு 13 நாள்களில் ராணா தன்னுடைய 31-வது வயதில் உயிரிழந்துள்ளார். ராணாவின் கண் மற்றும் இருதய வால்வுகளை அவர் பெற்றோர் தானமாக வழங்கினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.