சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், பேராசிரியர் ஞானவேல் பாபு என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், செல்போனில் இரட்டை அர்த்தத்தில் பேசி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் மாணவியின் புகாரை விசாரிக்கும்படி மயிலாப்பூர் துணை கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மயிலாப்பூர் துணை கமிஷனர் தலைமையில் அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகாரளித்த மாணவியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், பேராசிரியர் ஞானவேல் பாபு, கொடுத்த செக்ஸ் டார்ச்சர் தொடர்பான ஆவணங்களை போலீஸாரிடம் கொடுத்தார். இதையடுத்து சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியோடு மாணவி கொடுத்த ஆதாரங்களை போலீஸார் ஆய்வுக்குட்படுத்தினர். அதோடு குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் ஞானவேல்பாபுவிடம் விசாரணை நடத்த போலீஸார் சம்மன் அனுப்ப உள்ளனர். இதற்கிடையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் ஞானவேல்பாபுவை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. கடந்த 2024-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், ஞானசேகரன் என்பவரால் பாலியல் டார்ச்சருக்குள்ளாகினார். அந்த வழக்கில் ஞானசேகரனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் பேராசிரியர் ஒருவர் மீது மாணவி அளித்திருக்கும் பாலியல் குற்றச்சாட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.