போரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; 'மாஸ்டர் பிளானை' தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detail

நாளையோடு ஈரான் போர் நான்கு வாரங்களை நிறைவு செய்யப்போகிறது.

‘ஈரான் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது…’, ‘சிறப்பான பேச்சுவார்த்தை இது’; ‘அமெரிக்காவிற்கு பரிசாக ஈரான் 10 கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதித்துள்ளது’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஷ்டத்திற்கு அடுக்கிக் கொண்டே போகிறார்.

‘இதை எதையுமே நாங்கள் செய்யவில்லை’ என்று முழுமையாக மறுக்கிறது ஈரான்.

ட்ரம்போ, ‘நாங்கள் மதிக்கும் ஈரான் தலைவர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்’ என்று கூறுகிறார். ஆனால், அந்தத் தலைவர் யார் என்று தான் தெரியவில்லை. ஒருவேளை, அது ட்ரம்ப் அரசாங்கத்திற்கு மட்டும் தெரிந்த ரகசியமாக இருக்கலாம்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்ப் மீண்டும் மீண்டும் இப்படி பேசுவது… தாக்குதலை 6 நாள்களுக்கு… 10 நாள்களுக்குத் தள்ளி வைப்பதைப் பார்த்தாலே தெரிகிறது, ‘அவர் விரைவில் ஈரான் போரை முடிக்க நினைக்கிறார்’ என்று.

ஈரானின் ‘செக்’

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி உலக அளவிலான எரிசக்தி மற்றும் எரிவாயு வணிகத்திற்கு மிகப்பெரிய ‘செக்’கை வைத்துவிட்டது. இதனால், பெரும்பாலான உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கு, அமெரிக்கா மட்டும் விதிவிலக்கு ஆகாது என்பது நாம் அறிந்ததே.

ஈரான் தங்களை சுற்றியுள்ள அமெரிக்க நட்பு நாடுகளை சுற்றி சுற்றி தாக்கி வருகிறது. இதனால், அமெரிக்கா மீது சற்று அதிருப்தியில் தான் இருக்கின்றன அந்த நாடுகள்.

இதில் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா அமைத்துள்ள படைத்தளம், அமெரிக்காவின் படைவீரர்கள் என பலரும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.

இப்படி பல முனை தாக்குதலில் தள்ளாடி வருகிறார் ட்ரம்ப்.

இஸ்ரேல் - ஈரான்
இஸ்ரேல் – ஈரான்

இஸ்ரேல் – ஈரானின் ‘ஈசி’ டார்க்கெட்

இந்தத் தள்ளாட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போட்ட ஒரு திட்டம் தவிடுபொடி ஆனதே காரணம்.

மேற்கு ஆசிய நாடுகள், அமெரிக்கா என்று பேசிக்கொண்டிருந்த இடத்தில், திடீரென நெதன்யாகு எங்கே வந்தார் என்று தானே கேள்வி எழுகிறது.

ஈரான் இஸ்ரேலுக்கு தான் மிகப்பெரிய அச்சுறுத்தல். ஹிஸ்புல்லா போன்று இஸ்ரேலுக்கு எதிராக உருவாகும் தீவிரவாதக் குழுக்களுக்கு ஈரான் தான் நிதியுதவி அளித்து வளர்த்து வருகிறது.

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் 1,500 கிலோ மீட்டர் தூரம் தான். ஆனால், அமெரிக்காவிற்கோ 11,600 கிலோ மீட்டர்.

இஸ்ரேலை தாக்க ஈரான் ஏவுகணைக்கு 12 நிமிடங்கள் போதும். ஆனால், ஈரானில் இருந்துகொண்டு அமெரிக்காவைக் குறி வைக்கவே முடியாது.

ஈரான் அமெரிக்காவைத் தாக்க வேண்டுமென்றால் இரண்டே வழிகள் தான் உள்ளன.

ஒன்று, மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் படைத்தளங்கள் மற்றும் சொத்துகளை அழிப்பது.

மற்றொன்று, மேற்கு ஆசிய நாடுகளில் பிரச்னையை ஏற்படுத்தி, உலக பொருளாதாரத்திற்கு குந்தகம் விளைவிப்பது.

இந்த இரண்டையுமே ஈரான் செய்யாது. காரணம், தாங்கள் ஆரம்பித்தால் அமெரிக்கா சும்மா விடாது என்று ஈரானுக்கு நன்றாகவே தெரியும். அதனால், அது வீண் வம்பிற்கு போகாது.

ஆனால், ஈரானும், இஸ்ரேலும் பக்கத்து பிராந்திய நாடுகளே. அதனால், ஒன்று வளர்வது இன்னொன்றுக்குப் பிடிக்காது. இது இயற்கையானது.

இஸ்ரேல் தன்னுடைய வாழ்வாதாரத்திற்குப் பிரச்னை என்றால், பொறுத்துக்கொண்டு இருக்காது. இதற்கு பாலஸ்தீனப் போரே நல்ல உதாரணம்.

அதனால் தான், இஸ்ரேல் ஈரானைப் பெரிய அச்சுறுத்தலாக பார்க்கிறது.

நெதன்யாகு
நெதன்யாகு

இஸ்ரேலின் மாஸ்டர் பிளான்

இஸ்ரேலுக்கு ஈரான் முழுவதுமாக அழிய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. ஈரானில் உள்ள ஆட்சியை மாற்றினாலே போதுமானது.

அயோதுல்லா அலி கமேனி அந்தப் பிராந்தியத்தில் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவர் என்பது மறுப்பதற்கில்லை. அவரை இஸ்ரேலால் கண்டிப்பாக வழிக்குக் கொண்டுவர முடியாது.

அவர் ஈரானை முன்னிறுத்தியே காய்களை நகர்த்துவார். அவரை அகற்றிவிட்டாலே, இஸ்ரேலுக்கு உள்ள அச்சுறுத்தல் போய்விடும்.

நாட்டில் பெருகும் விலைவாசி, ஊழல், நாணய மதிப்பிழப்பு போன்றவற்றை எதிர்த்து தெருக்களில் இறங்கி போராட தொடங்கினர் ஈரான் மக்கள். இது கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது.

இதைப் பயன்படுத்திக் கொள்ள தான் நெதன்யாகு நினைத்தார்.

எப்படியோ கமேனியை கொன்றுவிட்டால், ஈரான் மக்கள் களத்தில் இறங்கி புரட்சி ஏற்படுத்துவார்கள். விளைவு, ஆட்சி மாற்றம் ஏற்படும்.

இதனால், போர் நீண்ட காலத்திற்கு செல்லாது… கமேனியை மட்டும் அழித்துவிட்டால் போதும் என்பது நெதன்யாகு திட்டம்.

இதை கூறி தான், ட்ரம்பை உடனடியாக போருக்கு சம்மதிக்க வைத்தார் என்று சமீபத்தில் வெளியான அறிக்கைகள் கூறுகின்றன.

அயதுல்லா கமேனி
அயதுல்லா கமேனி

இப்படி நெதன்யாகு போட்ட திட்டத்தை ஈரான் மக்கள் ஏன் செயல்படுத்தவில்லை என்கிற கேள்விக்கான பதில்களை அரசியல் பார்வையாளர்கள் தருகின்றனர்…

> ஈரானின் பாதுகாப்பு படை, ‘இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை’. டிசம்பர் மாதம் தொடங்கிய மக்கள் போராட்டத்தைக் கடுமையாக ஒடுக்கியது இந்தப் படை.

இதன் தாக்குதலில் கிட்டத்தட்ட 30,000 பேர் கடந்த ஜனவரி முதல் இறந்திருக்கிறார்கள் என்கிற தரவுகள் வெளியாகி உள்ளன.

இப்போது போராட்டத்தைத் தொடங்கினால், இந்தப் படை இன்னமும் ஆக்ரோஷமாக தாக்கும் என்கிற பயம் ஈரான் மக்கள் இடையில் இருக்கிறது.

எங்கேயும் கூட்டம் கூடி விடக்கூடாது என்று ஈரான் அரசாங்கம் மிக தெளிவாக இருக்கிறதாம். இதனால், ஆங்காங்கே கண்காணிப்புகள் இருந்துகொண்டே இருக்கிறது.

> ஈரான் ஆட்சிக்கு எதிராக சில மக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் நெதன்யாகுவை நம்பவில்லை. காரணம், இஸ்ரேல் பல ஆண்டுகளாக ஈரானின் பொருளாதாரத்தின் மீது குறி வைத்து வருகிறது. இதனால், அங்கே ஈரானின் சாதாரண மக்களும் கடுமையாக பாதித்துள்ளனர்.

> அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலை ஈரான் மக்கள் ‘வெளிநாட்டினரின் தாக்குதலாகவே’ பார்க்கின்றனர். இன்னொரு நாடு நம் நாட்டை எப்படி தாக்கலாம் என்கிற எண்ணம் அவர்களிடம் வலுவாக இருந்து வருகிறது.

> ஒருவேளை, இந்த நேரத்தில் போராட்டம் செய்து ஆட்சியைக் கலைத்தால், லிபியா, சிரியா போல வலுவான தலைமை இல்லாத நாடாக ஈரான் மாறும் என்று பயப்படுகின்றனர்.

மொஜ்தபா ஹொசைனி கமேனி
மொஜ்தபா ஹொசைனி கமேனி

> ஈரான் மக்களின் அதிருப்தியை ஒருங்கிணைக்க ஒரு வலுவான தலைமை அங்கே இல்லை. இது ஈரானில் இன்னும் ஆட்சி கலையாததற்கு மிக முக்கிய காரணம்.

> மேலும், கமேனியின் இறப்பிற்குப் பின், ஈரானின் தலைமையும் ஒரு முக்கியமான… நுணுக்கமான நகர்வு ஒன்றை செய்தது. அது உடனே இன்னொரு உச்ச தலைவரை தேர்ந்தெடுப்பது ஆகும்.

தலைவர் இல்லையென்றால் தான், ஒரு நாட்டின் அடித்தளத்தைத் தகர்க்க முடியும். இதற்கு முட்டுக்கட்டைப் போடுவது போல, ஈரானின் தலைமை உடனடியாக மொஜ்தபா கமேனியை உச்ச தலைவர் ஆக்கியது.

> அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து ஈரானைத் தாக்கி வருகின்றன. இதனால், இந்த மக்களுக்கு தங்களுடைய பாதுகாப்பைத் தேடவே நேரம் சரியாக இருக்கிறது.

மேலும், உள்கட்டமைப்புகளை அழித்து வருகின்றன இந்த இரு நாடுகளும். இதுவும் அந்த மக்களுக்கு பெரிய அடி.

இவற்றை தாண்டி தான் இந்த மக்களால் தங்களது அரசுக்கு எதிராக போராட வர முடியவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.