தவெக சார்பில் வில்லிவாக்கத்தில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுகிறார். இன்று தனது தொகுதியில் ஆதவ் ஒரு பொதுக்கூட்டத்தையும் நடத்தி வருகிறார். அந்தக் கூட்டத்தில் திமுக-வினர் கண்ணாடி பாட்டில்களை வீசி தாக்குவதாக ஆதவ் கொந்தளித்திருக்கிறார்.

கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென எழுந்து மைக் முன் வந்த ஆதவ் ஒரு கண்ணாடி துண்டை காண்பித்து, ‘கூட்டத்தில் பெண்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் திமுக-வினர் கண்ணாடி பாட்டில்களை உடைத்து வீசி தாக்குகின்றனர்.
அவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். எங்களுக்கு எவ்வளவு கொடுமை செய்கிறீர்கள்? கரூரிலிருந்து எவ்வளவு இடைஞ்சல்கள்? எங்களுக்கு நியாயம் கிடைக்காமல் நான் இங்கிருந்து நகரமாட்டேன். கைதாகினாலும் பரவாயில்லை’ என கொந்தளித்து பேசியிருந்தார்.

திடீரென ஆதவ் கொந்தளித்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆதவ்வின் பேச்சை தொடர்ந்து கூட்டத்தில் இடையூறு செய்த சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல். கைதைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் தொடர்ந்து நடந்து வருகிறது.