Kaattaan: ''ரஜினி சார் 'நான் போர் அடிக்கிறேனா'னு கேட்டாரு!" – வடிவேல் முருகன் ஷேரிங்ஸ்

திரைப்பட விமர்சனங்கள் மூலம் நமக்கு பரிச்சயமானவர் வடிவேல் முருகன். இன்று தமிழ் சினிமாவில் நடிகராக ரவுண்டு வரத் தொடங்கிவிட்டார்.

‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘காட்டான்’ வெப் சீரிஸில், கதையை முன் நகர்த்திக் கொண்டுப் போகும் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார்.

Kaattaan Web Series
Kaattaan Web Series

உடல்மொழி, வட்டார வழக்கு என காளை பாண்டியன் கதாபாத்திரத்திற்குள் தன்னை முழுமையாகப் பொருத்தி நடிப்பில் கச்சிதமும் காட்டியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ‘ஜெயிலர் 2’, ‘கருப்பு’ உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். ‘காட்டான்’ சீரிஸுக்கு வாழ்த்துச் சொல்லி அவரை பேட்டி கண்டோம்.

வடிவேல் முருகன் பேசுகையில், “‘காட்டான்’ வாய்ப்புக்கு ஒரு வகையில் ‘கடைசி விவசாயி’தான் காரணம்னு சொல்லலாம். அந்தப் படத்துக்கு நான் விமர்சனம் செய்திருந்தேன். அதைப் பார்த்துட்டு இயக்குநர் மணிகண்டன் சார் என்கிட்ட பேசினாரு. ‘உங்களுடைய நம்பர் என்கிட்ட முன்னாடியே இருந்தது. என் படத்தைப் பத்தி நீங்க என்ன விஷயம் சொல்றீங்கனு பார்த்துட்டு பேசலாம்’னு இருந்தாக அவர் சொன்னார்.

பிறகு ‘கடைசி விவசாயி’ படத்தைப் பத்தி நிறைய உரையாடினோம். ‘உங்களுடைய கடைசி விவசாயி விமர்சனம் ரொம்ப கவித்துவமாக இருக்கு. சினிமாவை ரொம்ப சென்சிபிளாக அணுகுறீங்க’னு பாராட்டினாரு.

பிறகொரு நாள் கால் பண்ணி, ‘என்ன படம் போயிட்டு இருக்கு. ரெண்டு மூணு மாசம் ஃப்ரீயாக வச்சுக்கோங்க. ஒரு முக்கியமான கேரக்டர் இருக்கு’னு சொன்னாரு.

Vadivel Murugan - Kaattan Web Series
Vadivel Murugan – Kaattan Web Series

அங்கிருந்துதான் ‘காட்டான்’ பயணம் தொடங்குச்சு. இப்போ என்னுடைய காளை பாண்டியன் கேரக்டருக்கும் ரொம்ப நல்ல வரவேற்பு தர்றாங்க. ‘உங்ககிட்ட இருந்து இவ்வளவு டெப்தா ஒண்ணு எதிர்பார்க்கல’னு சொல்லி வாழ்த்துறாங்க.

அதாவது, ஒரு வாய்ப்பு கிடைச்சாதான் நமக்குள்ள இருக்கிற விஷயங்களை நிரூபிக்க முடியும். அப்படி மணிகண்டன் சார் என்னை நம்பி இந்த வாய்ப்பைக் கொடுத்ததுல ரொம்ப மகிழ்ச்சி. இப்போ சந்தோஷத்தைத் தாண்டி வேறொண்ணும் இல்ல!

ஏன்னா, கதையின் போக்கை மாற்றிக் கொண்டுப் போகிற ஒரு கதையின் நாயகன் கதாபாத்திரம் கிடைச்சது, இந்த குறுகிய காலத்துல எனக்கு கிடைச்ச பெரிய விஷயமாகப் பார்க்கிறேன். நிச்சயமாக, என்னை நடிகராக இந்த சீரிஸ் அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு போகும். இனி வரும் வாய்ப்புகளை தைரியமா, பக்குவமாக அணுகிடுவேன்னு நம்பிக்கையையும் இந்த வாய்ப்பு கொடுத்திருக்கு.” என்றார் மனநிறைவோடு.

“எனக்கு காளை பாண்டியன் கதாபாத்திரமும், அதனுடைய களமும் பரிச்சயமே கிடையாது. நான் அப்படியான சூழல்ல வளர்ந்தவன் கிடையாது. ஆனா, காளை பாண்டியனுக்கான உடல்மொழியை கொண்டு வர்றதுக்கு மணிகண்டன் சார் சொன்ன பின் கதைகள் உதவி பண்ணுச்சுனு சொல்லலாம்.

காளை பாண்டியனுக்கு அவர் சொன்ன பின் கதை, எனக்கு கேரக்டர் பத்தின முழுமையான புரிதல் தந்தது. மணிகண்டன் சார் ஆர்டிஸ்ட் அனைவருக்குமே சுதந்திரம் கொடுப்பாரு. நம்மளாக அந்த நேரத்துல பேசுகிற வசனங்களுக்கும் அனுமதி தருவாரு. சில சமயங்கள்ல மட்டும்தான் அதனுடைய அளவுல சில மாற்றங்கள் சொல்வாரு.

ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் நல்ல விஷயங்கள் சொன்னால்கூட கைக்கொடுத்து பாராட்டக்கூடியவர் அவர்.” என்றவர், “இந்த சீரிஸ்ல எனக்கு சில ரொமான்ஸ் காட்சிகளும் இருக்கு. அது எனக்கு சவாலே கிடையாதுனுதான் சொல்வேன். ஆரம்பத்துல கொஞ்சம் தயக்கமாக இருந்துச்சு. பிறகு அதுவாகவே பழகிடுச்சு.” என்றார்.

Vadivel Murugan - Kaattan Web Series
Vadivel Murugan – Kaattan Web Series

“சினிமா விமர்சனம் செய்துக் கொண்டிருந்தவர் இப்போது சினிமாவில் நடிக்கிறார் என தீர்மானத்தோடு சினிமா வட்டாரத்தினர் பார்க்கிறார்களா?” எனக் கேட்டதும், “இப்பவும் என் மீதான பார்வை அப்படித்தான் இருக்கு. சினிமாவும் விமர்சனமும் தனித்தனினு நினைச்சுக்கிறாங்க.

நான் சினிமாவுக்கு நடிக்க வரணும்னு விமர்சனம் செய்யத் தொடங்கல. ஆக்ஸிடெண்டாகதான் நடிக்க வந்தேன். இப்போ நான் நடிக்க வரலைனா, விமர்சனம் செய்திட்டு இருந்திருப்பேன்.

விமர்சனம் இல்லைனா, சினிமாவை பார்த்திட்டாவது இருந்திருப்பேன். எப்படியாவது நான் சினிமாவோடு இணைந்தேதான் இருந்திருப்பேன். நிறைய பேர் விமர்சனத்தை ஆரோக்கியமாகவும் எடுத்துக்கிறாங்க.

சில சமயங்கள்ல எதிர்பார்ப்போடு என்னுடைய விமர்சனங்களை பார்க்க வந்திருப்பாங்க, என்னுடைய விமர்சனம் அப்போ அவங்களை காயப்படுத்தி இருக்கலாம். அதுனால ‘நான் சரியானவன் நான் கார்னர் செய்யப்படுறேன்’னு சொல்லமாட்டேன்.

இப்பவும் நிறைய பேர் விமர்சனம் பண்ணச் சொல்லிக் கேட்டுட்டுதான் இருக்காங்க. ஆனா, தர்மமாக அது சரியா இருக்காது. விமர்சனம் செய்யுறதுனால எனக்கு பணம் வரும். எனக்குனு ஒரு ஆடியன்ஸ் கிடைப்பாங்க.

ஆனால், இன்னைக்கும் கோடாங்கிக்குள்ள இருக்கிற விமர்சகன் செத்துப் போகல. ஒரு கிரியேட்டருக்குள்ள ஒரு விமர்சகன் எப்போதும் இருப்பான். அவன்தான் அந்த கிரியேட்டர் செய்யக் கூடிய தவறுகளை சுட்டிக் காட்டுவான்.

Vadivel Murugan - Kaattan Web Series
Vadivel Murugan – Kaattan Web Series

சினிமாவுக்கு வந்ததுக்குப் பிறகு இதனுடைய பின் கதைகள் என்னனு எனக்கு தெரியுது. இப்பவும் இன்னொருவருடைய படைப்பை விமர்சனம் செய்வது தர்மமாக இருக்காது.” என்றவர் அவருடைய சினிமா ஆர்வம் பற்றி, “எனக்கு சினிமா மீது ஏன் இத்தனை ஆர்வம் வந்ததுனு தெரியல.

அந்தக் கேள்விக்கு இன்னைக்கு வரைக்கும் விடை கிடைக்கலனுதான் சொல்லணும். ஆனா, இது அடுத்தக்கட்டத்துக்கு போனதுக்குக் காரணம் ‘சேது’ திரைப்படம்தான். எனக்குள்ள அந்தப் படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துச்சு சொல்லலாம். 27 முறை நான் அந்தப் படத்தை பார்த்திருக்கேன்.

பாலா சார் அந்தப் படத்துக்கு நிறைய ப்ரிவியூ போட்டிருக்கேன்னு ஒரு நிகழ்வுல சொல்லியிருப்பாரு. அதைவிட நான் அதிகமாக என்னுடைய நண்பர்களுக்கு போட்டுக் காட்டியிருக்கேன். அங்கிருந்துதான் வேறொரு புள்ளி தொடங்குச்சுனு சொல்லலாம்.” என்றார்.

ரஜினியின் ‘ஜெயிலர் 2’விலும் இவர் நடித்திருக்கிறார். அது பற்றிக் கேட்கையில், “‘ஜெயிலர் 2’ படப்பிடிப்புக்கு போய் நான் தலைவர்கிட்ட கைகொடுத்து என்னுடைய பெயரை சொல்றதுக்கு முன்னாடியே அவர் என்னுடைய பெயரை சொல்லிட்டாரு.

இதுக்கு முன்னாடி அவர்கூட போட்டோ எடுக்கிறதுக்கு ரொம்ப முயற்சி பண்ணியிருக்கேன். ஆனா, இந்த முறை நடிக்கிறதுக்கே ஒரு வாய்ப்பு கிடைச்சிடுச்சு. என்னுடைய ரிவ்யூ விடியோஸை அவருடைய நண்பர்கள், அவருக்கு அனுப்பி வச்சிருக்காங்க.

‘நீங்க ஏதோ கதை சொல்வீங்கள்ல, எப்படி தனியாக 5 நிமிஷம் பேசுறீங்க’னு கேட்டாரு. அவரை நான் ஆச்சரியமாகப் பார்த்து வளர்ந்தவன். அவர் என்னை பார்த்து ஆச்சரியப்பட்டு பார்த்ததையெல்லாம் சொற்கள்ல விவரிக்க முடியாதுங்க!

Vadivel Murugan - Kaattan Web Series
Vadivel Murugan – Kaattan Web Series

அவர்கூட 6 நாள் சேர்ந்து நடிச்சிருக்கேன். முதல் 5 நாட்கள் அவர்கூட நிறைய பேசிட்டு இருந்தேன். பிறகு 6வது நாள் நம்ம அவருக்கு போர் அடிக்கிற ஃபீல் கொடுத்திடக் கூடாதுனு நினைச்சு தனியாக போய் உட்கார்ந்துக்கிட்டேன்.

அவர் ஆட்கள் அனுப்பி என்னை கூப்பிட்டுவிட்டு ‘ஏன் ஒளிஞ்சுக்கிறீங்க. நான் எதுவும் போர் அடிக்கிறேனா’னு கேட்டாரு. பிறகு அவருடனான காட்சியில நான் வசனம் பேசணும்.

நான் பேசி முடிச்சதும், ‘பரவாயில்ல, டேக் எடுப்பீங்கனு நினைச்சேன். முடிச்சிட்டீங்க’னு சொன்னாரு. பிறகு போட்டோ எடுத்துகிட்டு அவர்கிட்ட ஆசீர்வாதமும் வாங்கிட்டு வந்தேன். இதைத் தாண்டி, ‘கருப்பு’ படத்திலும் வக்கீலாக ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கேன். ஒரு கதையும் எழுதிட்டு இருக்கேன். சீக்கிரமே அடுத்தடுத்து அப்டேட் சொல்றேன்…” என முடித்துக் கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.