தேசிய நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளும் சுகமான பயணம், இன்று முதல் வாகன ஓட்டிகளுக்குச் சற்று கசப்பான அனுபவமாக மாறவுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவித்துள்ள புதிய சுங்கக் கட்டண உயர்வு, ஏப்ரல் 1-ம் தேதியான இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று ஏப்ரல் 1-ந் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

சுங்க கட்டண உயர்வு என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் அமல்படுத்தப்படும். வாகனங்களின் வகையைப் பொறுத்து, கார், வேன், லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் 5 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. சராசரியாக 5% முதல் 10% வரை கட்டணங்கள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக பெங்களூரு – சென்னை விரைவுச்சாலை (ஹோஸ்கோட்–KGF பகுதி), தபாஸ்பேட் – ஹோஸ்கோட் இடையிலான நகர சுற்றுச்சாலை, பெங்களூரு – மைசூரு விரைவுச்சாலை, கனகபுரா சாலை மற்றும் விமான நிலையச் சாலை உள்ளிட்ட முக்கிய தடங்களில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
மத்திய ஆசியாவில் நடந்துவரும் போர் காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதுதவிர அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பண்டங்கள் விலை உயர்வை எதிர்கொண்டுள்ள பொதுமக்கள், சுங்க கட்டண உயர்வால் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த கட்டண உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சுங்கக் கட்டணம் அதிகரிப்பதால், லாரி வாடகை உயரும், இதன் காரணமாக காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகளின் போக்குவரத்துச் செலவு அதிகரித்து, அதன் சுமை சாமானிய மக்களைச் சென்றடையும் என வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.