பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தவெக தலைவர் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்திருக்கிறார்.
புதுச்சேரியில் நேற்று (மார்ச்.31) இந்திய குடியரசு கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

இதில் அக்கட்சியின் தலைவரும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே கலந்துகொண்டிருக்கிறார்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் அவர், ” புதுச்சேரி மற்றும் அசாமில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் ஆட்சி இருக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வராது.
தேர்தலுக்கு பிறகு அங்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடிகர் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதேபோல் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை வீழ்த்திவிட்டு ஆட்சி அமைக்கும்.

கேரளத்தில் இப்போது ஆளும் மார்க்சிஸ்ட் ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அங்கும் பாஜக ஆட்சி அமைக்கும். அதனால் தேர்தலுக்குப் பிறகு 5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்.
நாட்டின் வலிமையான பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியில் இருக்கிறார். நாட்டின் வளர்ச்சிதான் அவரின் குறிக்கோள்” என்று பேசியிருக்கிறார்.