"சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எழுதப்பட்ட படம் தான் 'TN 2026'.! " – தம்பி ராமையா

தமிழக அரசியலின் தற்போதைய சூழ்நிலையை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட படமான ‘TN 2026’. தம்பி ராமையாவின் மகனான டைரக்டர் உமாபதி இயக்கத்தில், நட்டி நடிப்பில் உருவான இந்தப் படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் அப்படக் குழுவினரிடம் பேட்டி கண்டது சினிமா விகடன் குழு. அப்போது பேசிய இத்திரைப்படத்தின் கதையாசிரியரான தம்பி ராமையா, “18 வயசு ஆனால் ஓட்டு போட வேண்டுமா என்ற காலம் போய், ஓட்டு போடுவதற்காக 18 வயசு ஆகவேண்டும் என்று காத்திருக்கும் அளவுக்கு சமூக வளர்ச்சி அடைந்து விட்டது.

Natty - TN 2026
Natty – TN 2026

வீட்டை விட்டு வெளியே சென்றால் ஒரு இடத்திலாவது அரசியல் பேச்சு கேட்காமல் வீடு திரும்ப முடியாது. அரசியல் முதிர்வு என்பது 14 – 15 வயதிலேயே கிடைத்து விடுகிறது. எம்.ஜி.ஆரின் பாடல் கொடுத்த ஈர்ப்பால் அவரது வரலாற்றை அலசி ஆராய தொடங்கினேன்.

இது தொடர்பாக நிறைய தகவல்கள் சேகரிக்க தொடங்கினேன். கலைஞரும் எம்.ஜி.ஆரும் எப்படி ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். ஆனால் தற்காலத்து பிள்ளைகள் உடனடியாக கிடைக்கும் விஷயத்தை மட்டுமே விரும்புகின்றனர்.

அவர்களுக்கு வரலாற்றை புரிய வைக்க வேண்டும் என்று விரும்பினேன். இப்படி பல வருட வரலாற்றை ஒரு கதைக்குள் கொண்டுவந்து படத்தை தயாரிக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தயாரிப்பாளர் கண்ணன் ரவி ஆர்வம் காட்டினார். என் மகனிடம் இந்த படம் முழுக்க நான் நடிக்க வேண்டி இருக்கிறது நீ டைரக்டராக இருந்தால் நல்லா இருக்கும் என்று கூறிய உடன் அவனுக்கும் இந்த கதை தாக்கத்தை ஏற்படுத்தியதால் தயங்காமல் ஒற்றுக் கொண்டான்.

பின்னர் படத்தின் கதாபாத்திரங்களை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது இந்த படத்திற்கு நட்டி நடித்தால் நல்லா இருக்கும் என்று என் மகன் தான் கூறினான். தயாரிப்பாளர் கண்ணன் ரவிக்கும் இப்படத்தில் நட்டி நடித்தால் சரியாக இருக்கும் என்ற எண்ணம் இருந்தது. என் வயதுக்கும் முதிர்வுக்கும் நான் நடித்தேன்… நான் சம்பாதித்தேன் என்று இல்லாமல் சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.

விகடன் நேர்காணலில்...
விகடன் நேர்காணலில்…

அதற்காக எழுதப்பட்ட படம் தான் TN2026. இந்த இரண்டு மாதங்களில் நடந்தவை படத்தில் காட்சியாக்கப்பட்டுள்ளது. நாங்கள் எழுதிய ஒரு சில காட்சிகள் தற்போது உண்மையாக நடந்து கொண்டிருக்கிறது என்பது எங்களுக்கும் வியப்பாகத்தான் இருக்கிறது. படத்தின் வெளியீட்டுக்கு இடையூறாக இருக்கும் காட்சிகள் வைக்கப்படாமல் இருப்பதை என் மகன் உமாபதி உறுதி செய்து கொண்டே இருந்தான்.

GenZ கிட்ஸ்க்கு புரிவது போலும் படம் அமைய வேண்டும் என்பதில் டைரக்டர் உமாபதி குறிப்பாக இருந்தான். இளைய தளபதி விஜய் ஒரு இரவில் எல்லாம் அரசியலுக்கு வந்திருக்க முடியாது. அவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரன் சார் 100 எம்எல்ஏ-க்களுக்கு சமம். இப்படம் பல காலத்தில் நடந்ததன் ஒரு தொகுப்பு. முழு படத்தை பார்க்காமல் இந்த படம் இப்படித்தான் இன்று முடிவுக்கு வர வேண்டாம் என்பதை மட்டும் கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.