தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளிவந்த ‘கோர்ட்’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன்பே தகவல் பேசப்பட்டது.
தற்போது அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. படத்திற்கு ‘ரஞ்சன்’ என தலைப்பிட்டிருக்கிறார்கள். நடிகர் மற்றும் இயக்குநர் தியாகராஜன், ‘அந்தகன்’ படத்தைத் தொடர்ந்து இப்படத்தை இயக்குகிறார்.

பிரசாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரியும், தேவயாணியின் மகள் ப்ரியங்காவும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய நடிகை தேவயாணி, “முதல்ல தியாகராஜன் சாருக்கு ரொம்ப நன்றி. இன்னொரு தலைமுறை நடிக்க வர்றாங்க.
புதுமுகங்களை அறிமுகப்படுத்துறது மிகச் சிறப்பான விஷயம். அது அவர்களுடைய எதிர்காலத்தை செதுக்கும். அதுல என்னுடைய மகள் ப்ரியங்கா ராஜகுமாரனையும், ஹரி கதிரேசன் என்பவரையும் அறிமுகப்படுத்துறாங்க.

புதுமுகங்களை அறிமுகப்படுத்துறது என்பது அவங்களுக்கு லைஃப் கொடுக்கிற மாதிரியானது. கண்டிப்பாக இவங்க உங்களுடைய பெயரைக் காப்பாற்றுவாங்க.
நிச்சயமாக, நிறைய கடின உழைப்பையும் தருவாங்க.” என்றவர், ”’அப்பு’ படத்துல நடிக்கும்போது, என்னுடைய மகளும் பிரசாந்தும் இணைந்து நடிப்பாங்கனு நான் நினைச்சுக்கூட பார்க்கல.” எனப் பேசினார்.