திருத்தணியிலிருந்து சோளிங்கருக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பயணித்திருக்கிறார். பேருந்தில் அதிக கூட்டம் இருந்திருக்கிறது. இந்தச் சூழலில் டிக்கெட் கொடுப்பது போல கண்டக்டர் ஒருவர், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. முதலில் ஏதேச்சையாக கைபட்டு விட்டதாக மாணவி கருதியிருக்கிறார். ஆனால் கண்டக்டர் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை உணர்ந்த மாணவி, கூச்சல் போட்டிருக்கிறார். அதனால் சக பயணிகள், மாணவியிடம் என்ன நடந்தது என்று கேட்டிருக்கிறார்கள். உடனே கண்டக்டர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கண்ணீர் மல்க மாணவி கூறியிருக்கிறார். உடனே சக பயணிகள், கண்டக்டரிடம் என்ன நடந்தது என்று விசாரித்திருக்கிறார்கள். அப்போது கண்டக்டர், கூட்டத்தில் தெரியாமல் கைபட்டிருக்கலாம் எனக் கூறியிருக்கிறார். ஆனால் மாணவியோ, தெரியாமல் கைபடுவதற்கும் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும் தனக்குத் தெரியாதா எனக் கேள்வி எழுப்ப, மாணவிக்கு ஆதரவாக சிலர் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேருந்தைக் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லும்படி பயணிகள் தெரிவித்தனர்.

அதனால் கண்டக்டருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தநிலையில் மாணவியின் உறவினர்களுக்குத் தகவல் தெரிந்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டனர். பின்னர், அவர்கள் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் கண்டக்டரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தகவல் தெரிந்ததும் திருத்தணி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அதைத் தொடர்ந்து மாணவி தரப்பில் கண்டக்டர் மீது பாலியல் சீண்டல் தொடர்பாகப் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து திருத்தணி அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து கண்டக்டரைக் கைதுசெய்தனர். அவரிடம் விசாரித்தபோது அவரின் பெயர் இளையராஜா (49) எனத் தெரியவந்தது. ஓடும் பேருந்தில் மாணவிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த குற்றச்சாட்டில் கண்டக்டர் கைதுசெய்யப்பட்ட சம்பவம், திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.