LIK: "அனிருத் அப்போ 'நானும் ரௌடி தான்' படத்தின் ஹீரோ; ஆனால்…" – இயக்குநர் ராம்

விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் ‘LIK’ திரைப்படம், பல தாமதங்களுக்குப் பிறகு வருகிற ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வருகிறது.

‘டிராகன்’, ‘டியூட்’ திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் அடுத்த ரிலீஸாக மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகிறது இப்படம்.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நேற்று பிரமாண்டமான முறையில் சென்னையில் நடைபெற்றது.

LIK - Pradeep Ranganathan
LIK – Pradeep Ranganathan

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குநர் ராம், “நான் விக்னேஷ் சிவனுடைய ப்ரண்ட் & ரசிகர். 2012-ல இருந்து அவரை எனக்கு தெரியும்.

அன்னைக்கு என் ஆபீஸுக்கு வந்த விக்கிக்கும் இன்னைக்கு இருக்கிற விக்னேஷ் சிவனுக்கும் இடையில இருக்கிற உயரத்தைப் பார்த்து நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்.

விக்கிக்கு எதுவும் உடனே நடக்காது. எல்லோருக்கும் சுலபமா நடக்கிறது விக்கி கஷ்டப்பட்டுதான் சாதிப்பாரு. தமிழ் சினிமாவில யாரும் முயற்சிக்காத கதை பரப்புல ஒரு கதை பண்றதுதான் விக்னேஷ் சிவனுடைய அடையாளம்.

‘முன்னா பாய் எம்.பி.பி.எஸ்’, ‘3 ஐடியட்ஸ்’ போன்ற படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி மாதிரி தமிழ்ல படம் எடுக்கக்கூடிய இயக்குநர் விக்னேஷ் சிவன்தான். ‘நானும் ரௌடி தான்’ படத்தின் கதையை 300 முறை கேட்டிருப்பேன்.

300 முறையும் நான் சிரிச்சேன். அனிருத் அப்போ ‘நானும் ரௌடி தான்’ படத்தினுடைய ஹீரோ. ஆனால், அதை ஏன் அவர் அப்போ பண்ணலனு தெரியல. காதல் ரொம்ப விசித்திரமான, அற்புதமானது, அழகானது.

மின்னல் அடிக்கிற நொடியில கையைப் பிடிச்சுட்டா சேர்ந்திடுவோம். அப்படி மின்னல் அடிச்ச நேரத்துல விக்கிக்கும், நயன்தாராவுக்கும் காதல் நடந்துருச்சு. நான் விக்கியை ‘விக்கி மிக்கி லக்கி பாய்’னுதான் சொல்வேன்.

Director Ram
Director Ram

இந்த நிகழ்வுக்கு என்னை நயன்தாராதான் அழைத்தாங்க. மூன்று நாள்களுக்கு முன்பு, இரண்டு நாள்களுக்கு முன்பு, நேற்று, இன்றுனு தொடர்ந்து என்னை அவங்க கூப்பிட்டாங்க. அப்படிப்பட்ட மனைவி கிடைத்திருக்கும் அதிர்ஷ்டமான ஒருவர்தான் விக்கி.

அந்தக் காலத்தில் பாரதிராஜாவிடமிருந்து பாக்யராஜ் வந்தார்; பாக்யராஜிடமிருந்து பார்த்திபன், பாண்டியராஜன் ஆகியோர் வந்தனர். அப்படிப்பட்ட இயக்குநர்கள் ஹீரோவாகலாம் என்ற அலையை மீண்டும் தமிழ்நாட்டில் உருவாக்கியது பிரதீப்.

ஹீரோவாவதற்கு உருவமோ, உயரமோ, எடையோ அவசியமில்லை என்பதை மீண்டும் நிரூபித்தவர்” எனக் கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.