ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இதுமட்டுமின்றி, ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தின் முதற்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன.

இப்படி அடுத்தடுத்து திட்டங்களை ரஜினிகாந்த் தற்போது கையில் வைத்திருக்கிறார். இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருக்கிறார்.
தொடக்கத்தில் இளைஞர்கள் அட்வைஸ் சொன்ன ரஜினிகாந்த், “இளைஞர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும். அடிபட்டால் அவங்களுக்குத்தான் காயமாகும்.
முதல்ல படிக்கிற நேரத்துல படிப்புல மட்டும்தான் அவங்களுடைய முழு கவனம் இருக்கணும். அந்த நேரத்தை அவங்க விட்டுட்டா, வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்படுவாங்க.
அதை அவங்க எண்ணத்துல வச்சு செயல்படணும். இளைஞர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாதீங்க. அது உங்களுடைய வாழ்க்கையைக் கெடுத்துவிடும்.

அது உங்களுடைய வாழ்க்கையை மட்டுமல்ல, உங்களுடன் சம்பந்தப்பட்டவர்களையும் அது பாதிக்கும். உங்களைத் தவறான வழிக்குக் கூட்டிச் செல்லும் நண்பர்கள் கிடைச்சா, அவங்க பக்கத்துலகூட போகாதீங்க!” என்றவர், “நானும் கமல் ஹாசனும் சேர்ந்து நடிக்கிற படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்துல தொடங்குது.
‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு மூன்று நாட்கள்ல முடியும். நானும் கமல் ஹாசனும் சேர்ந்து நடிக்கிற படத்தின் கதை தேர்வாகிடுச்சு.” என்றார்.
தொடர்ந்து ‘ஜனநாயகன்’ படத்தின் முடக்கம் பற்றி கேள்விக்கு, “சாரி, அது பத்தி கருத்து சொல்ல விரும்பல.” என்றார்.