சட்டமன்றத் தேர்தல் 2026: அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரியில் தொடங்கிய வாக்குப்பதிவு!

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் தேதியும் குறிப்பிடப்பட்டது. அதன் அடிப்படையில் இதில், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் இன்று (9-ம் தேதி) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பினராயி விஜயன்

கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி முன்னணி (LDF) மூன்றாவது முறையாக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்யப் போராடுகிறது. அவர்களுக்குப் போட்டியாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மற்றும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) களத்தில் உள்ளன. இந்த தேர்தலில் 92 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 890 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுமார் 2.71 கோடி பேர் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற உள்ளனர்.

மக்களவைத் தேர்தலை விடவும் சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரி இம்முறை அதிக கவனம் ஈர்த்துள்ளது. ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்க முயல்கிறது. அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி பலமான வியூகம் அமைத்துள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் களமிறங்கியுள்ளதால், புதுச்சேரியில் பலமுனைப் போட்டி நிலவுகிறது. 30 தொகுதிகளில் உள்ள 9.48 லட்சம் வாக்காளர்கள், 294 வேட்பாளர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகிறார்கள்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

அஸ்ஸாமில் உள்ள 126 தொகுதிகளில் ஆட்சியைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. கடந்த இரண்டு முறைகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்க்கிறது. அதேசமயம், பா.ஜ.க-விற்கு தாவிய முன்னாள் காங்கிரஸ் தலைவர்களால் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற காங்கிரஸ் இம்முறை தீவிரமாகப் போராடுகிறது. இந்த தேர்தல் களத்தில் 59 பெண் வேட்பாளர்கள் உட்பட 722 வேட்பாளர்கள் களமாடுகின்றனர். சுமார் 2.5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெறுவதற்கு லட்சக்கணக்கான பாதுகாப்புப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்த மூன்று மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் மே மாதம் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.