கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளா மாநிலத்திற்குத் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிமவளங்கள் கொண்டுச் செல்லப்படுகின்றன.
குண்டு கற்கள், எம் சாண்ட், ஜல்லி உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் லாரிகளால் குமரி மாவட்டத்தில் அடிக்கடி விபத்துகள் நடப்பதும், உயிரிழப்பு ஏற்படுவதும் வழக்கமாக உள்ளன.
நேற்று இரவு மார்த்தாண்டம் மற்றும் தக்கலை பகுதியில் கனிமவள லாரிகளால் விபத்து ஏற்பட்டது. களியல் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் கிறிஸ்துராஜ் என்பவர் மகள் ஹாட்லின் அபினா பைக்கில் சென்றார். தக்கலையில் சென்றபோது அவரது பைக் மீது கனிமவள லாரி மோதிய விபத்தில் சிறுமி ஹாட்லின் அபினா பலியானார்.
அந்தச் சமயத்தில் அவ்வழியாகச் சென்ற நா.த.க பத்மநாபபுரம் வேட்பாளர் சீலன் மற்றும் அக்கட்சியினர் உடனடியாகச் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி எஸ்.பி ஸ்டாலின் உடனடியாக அங்கு சென்று ஆய்வு நடத்தினார்.
இந்த நிலையில் கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை உள்ள நெடுஞ்சாலையில் கனிமவள லாரிகள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஆர்.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரி வழியாக கேரள மாநிலத்திற்கு கனிமம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக கடந்த 07.04.2026 அன்று தோவாளை வட்டம் திருப்பதிசாரம் பகுதியில் வாகன விபத்து ஏற்பட்டு சிகிச்சையின் போது ஒருவர் 09.04.2026 அன்று உயிரிழந்தார். கடந்த 07.04.2026 அன்று கல்குளம் வட்டம் வில்லுக்குறி பகுதியில் விபத்து நடைபெற்றுள்ளது.
கடந்த 09.04.2026 அன்று இரவு 10 மணிக்கு நாகர்கோவில் நோக்கி சென்ற லாரி தக்கலை காவல் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது விபத்து ஏற்பட்டு இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரில் ஒருவர் வாகனத்தின் பின்புற சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக தக்கலை காவல் நிலைய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து லாரி ஓட்டுநருடைய கவனக்குறைவால் ஏற்பட்டதாகத் தெரியவருகிறது.

இவ்வாறு தொடர்ச்சியாக கனிமம் ஏற்றிச் செல்லும் அதிவேக வாகனங்களால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு, பொதுமக்களுக்கும் அவர்களின் உடைமைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவது தொடர் நிகழ்வாக உள்ளது.
நாகர்கோவில் – களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை கன்னியாகுமரி மாவட்ட மக்களின் அன்றாட சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்கும், கன்னியாகுமரி மாவட்டமானது சுற்றுலா தலமாக அமைந்துள்ளதால் இம்மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் முக்கிய சாலையாகவும் அமைந்துள்ளது.
இதற்கு மாற்று வழி இல்லாததாலும் மார்த்தாண்டம் மேம்பாலப் பகுதி உட்பட நாகர்கோவில் – களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை கனிமம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கடக்கும் போது மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கனிம வாகனங்கள் அதிவேகமாகச் செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுத்திடும் விதமாக, விபத்தில்லா சாலை போக்குவரத்தை உறுதிப்படுத்துவது என்பது மிகவும் அவசியம் ஆகிறது.

மேலும், கனரக வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன ஓட்டுநர்கள் மூலம் வாகனங்களை அதிவேகமாக இயக்குவதால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது. பலமுறை உத்தரவுகள் வழங்கியும் அவர்கள் விதிமுறைகளைப் பின்பற்றுவது இல்லை.
எனவே பொதுமக்களின் நலன் மற்றும் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் கருதி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரையிலான தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி முடிவடைந்து செயல்பாட்டிற்கு வரும் வரை கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கு கனிமங்களை கனரக வாகனங்களின் மூலம் ஏற்றிச் செல்ல தடை விதித்து ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.