”ஐந்து தொகுதிகள் இலக்கு” – தஞ்சாவூரில் எடப்பாடி பழனிசாமி, தினகரன் இணைந்து செய்த பிரசாரம் எடுபடுமா?!

தஞ்சாவூர் மாவட்டத்தில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் 2021 சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. அப்போது அதிமுகவிலிருந்த வைத்திலிங்கம் தனது தனிப்பட்ட செல்வாக்கால் வாகை சூடினார்.

தற்போதைய 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் எட்டு தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் எனப் பேசி வருகின்றனர். தஞ்சாவூர் திலகர் திடலில் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலினிடம், எட்டு தொகுதிகளையும் வென்று தங்களுக்குச் சமர்பிப்போம் என்று மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் பேசியதற்கு கட்சியினர் ஆரவாரம் செய்தனர்.

தஞ்சாவூரில் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் ஒன்றாக பிரச்சாரம்
தஞ்சாவூரில் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் ஒன்றாக பிரச்சாரம்

இந்நிலையில், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தஞ்சாவூரில் எடப்பாடி பழனிசாமியும், டி.டி.வி.தினகரனும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே வாகனத்தில் நின்றபடி வாக்கு சேகரித்தது அரசியல் மட்டத்தில் கவனம் பெற்றுள்ளது.

எட்டு தொகுதியும் எங்களுக்குத்தான் எனத் திமுகவினரும், ஐந்து தொகுதிகள் எங்களுக்குச் சாதகமாக இருக்கின்றன என அதிமுகவினரும் பேசி வருகின்றனர். இரு கட்சியினரும் களத்தில் பம்பரமாகச் சுழல்கின்றனர்.

அதிமுக மாநகரச் செயலாளர் சரவணன் தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை வெற்றி செய்வதற்கான வியூகம் வகுத்து செயல்படுகிறார் என்கிறார்கள்.

அமமுக ஓரளவிற்கு வலுவாக இருக்கும் பகுதிகளில் தஞ்சாவூரும் ஒன்று. அதன் மாநகரச் செயலாளர் ராஜேஸ்வரனும் முருகானந்தத்திற்கு வலுசேர்கிறார். இதனால் தலைநகரான தஞ்சாவூரில் மட்டுமின்றி எட்டு தொகுதிகளிலும் பலத்த போட்டி நிலவுவதால் தொகுதிக்குள் அனல் தகிக்கிறது என்கிறார்கள்.

இது குறித்து விபரம் அறிந்த புள்ளிகளிடம் பேசினோம், ”கடந்த தேர்தலில் எட்டு தொகுதிகளில் ஒரத்தநாட்டில் மட்டுமே அதிமுக வென்றது. இதே போல் திருவாரூரில் ஆர்.காமராஜ், வேதாரண்யத்தில் ஓ.எஸ்.மணியன் என நான்கு மாவட்டங்களில் மூன்று தொகுதிகளை மட்டுமே அதிமுக கைப்பற்றியது.

வேட்பாளர்கள்
வேட்பாளர்கள்

இதனால் இம்முறை டெல்டா மாவட்டங்களில் அதிமுக தனி கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் எப்படியும் சில தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என முனைப்பு காட்டி வருகின்றனர் அதிமுகவினர்.

அமமுக கூட்டணியில் இருப்பதும் இதற்கு வலுசேர்ப்பதாக அமைந்திருக்கிறது என்கிறார்கள். தஞ்சாவூரைப் பொறுத்தவரை திருவையாறு, பாபநாசம், பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளில் இரு கட்சி வேட்பாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்தத் தொகுதிகளை எப்படியும் கைப்பற்ற வேண்டும் என்பது அதிமுகவின் இலக்காக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிசாமியும், தினகரனும் ஒன்றாகச் சேர்ந்து பிரசாரம் செய்தனர். இதில் தினகரன், உங்கள் எழுச்சியைப் பார்க்கும்போது எட்டு தொகுதிகளும் நமக்குதான் என்பதைக் காட்டுவதாக உள்ளது என்றார்.

தஞ்சாவூர் அதிமுகவின் கோட்டை என்று உற்சாகமூட்டினார் எடப்பாடி பழனிசாமி. பாபநாசம் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடுகிறது. அதன் வேட்பாளர் தொகுதியைச் சேர்ந்தவர் இல்லை என்பதால் அதிமுக வேட்பாளர் சண்முகபிரபுவுக்குச் சாதகமான சூழல் நிலவுவதாகச் சொல்கிறார்கள்.

தஞ்சாவூரில் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் ஒன்றாக பிரச்சாரம்
தஞ்சாவூரில் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் ஒன்றாக பிரச்சாரம்

திருவையாறில் மீண்டும் வெற்றியைத் தக்க வைத்து கொள்ள துரை.சந்திரசேகரன், அமமுக வேட்பாளர் வேலு கார்த்திக்கேயனுக்கு எதிராக மல்லு கட்டுகிறார். ஒரத்தநாட்டில் களம் காணும் வைத்திலிங்கம் புதிய வேட்பாளர் போல் தொகுதிக்குள் பாய்ச்சல் காட்டுகிறார்.

இரு கட்சி வேட்பாளர்களும் களத்தில் காட்டுகின்ற வேகம் அனலைக் கூட்டியுள்ளன. இருக்கட்சித் தலைமையும் எட்டு தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கி தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர். யார் இலக்கை எட்டுவார் என்பது தேர்தல் முடிவில் தெரியும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.