மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ரயில் நிலையம் அருகில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது.
கடந்த ஆண்டு கட்டப்பட்ட இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டபோதுதான் அது போக்குவரத்திற்குப் பயன்படுத்த முடியாதது என்று தெரியவந்தது. பாலம் 90 டிகிரி வளைவில் கட்டப்பட்டது.
விரைவாக வரும் வாகனங்கள் திடீரென திரும்பும் வகையில் கட்டப்பட்டு இருந்தது. போக்குவரத்திற்கு இந்த மேம்பாலம் திறக்கப்படும் முன்பே இப்பிரச்னை எழுந்தது. பாலத்தைப் பயன்படுத்தினால் அதிக அளவில் விபத்து ஏற்படும் என்று கருதி பாலத்தை போக்குவரத்திற்குத் திறக்கவேயில்லை.
பாலத்தைக் கட்டிய ஒப்பந்ததாரரிடம் கேட்டதற்கு, பாலத்தை மேற்கொண்டு அகலமாகக் கட்டுவதகற்கு இடமில்லை என்று தெரிவித்துவிட்டார். இது தொடர்பாக 7 பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சர்ச்சைக்குறிய மேம்பாலம் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் கடந்த 10 மாதங்களாக பாலத்தை என்ன செய்வது என்று அதிகாரிகள் ஆலோசித்து வந்தனர்.
தற்போது அதற்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. ரூ.18 கோடியில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் வடிவத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட வடிவமைப்பின்படி, பாலத்தின் வளைவின் ஆரம் 2 மீட்டரிலிருந்து 2.5 மீட்டராகவும், பாலத்தின் அகலம் 8.5 மீட்டரிலிருந்து 10.5 முதல் 11 மீட்டராகவும் விரிவுபடுத்தப்படும்.
இதன் மூலம், கார்கள் மற்றும் நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் பாதுகாப்பாகச் செல்ல முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கான பணிகள் வரும் வாரத்தில் தொடங்கப்படும் என்றும், ஏற்கனவே இப்பாலத்தைக் கட்டிய அதே ஒப்பந்ததாரர்தான் புதிய திருத்தப்பட்ட பாலத்தையும் கட்டுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.