உக்ரைன் விவகாரம்: ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: உக்ரைன் நிலவரம், இந்தோ-பசிபிக் பிராந்திய பிரச்சினைகள் குறித்து ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இன்று நேற்று இந்தியா வந்தார் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியுடன் அவர் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின்போது தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் உட்பட இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையிலான நீடித்த ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் பேசினர். இதன் தொடர்ச்சியாக உயர்மட்ட வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப ஆணையத்தை உருவாக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையிலான நட்புறவின் அனைத்து அம்சங்கள் குறித்த அரசியல் அளவிலான தொலைநோக்குப் பார்வையை வழங்குவதுடன் பல்வேறு துறைகளிலும் ஒத்துழைப்பிற்கான ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் என உர்சுலா வான் டெர் லேயன் கூறினார்.

பெரிய மற்றும் வலிமையான ஜனநாயக அமைப்புகளைக் கொண்ட இந்தியாவும், ஐரோப்பாவும், ஒரே மாதிரியான நற்பண்புகள் மற்றும் பல்வேறு உலக விவகாரங்களில் பொதுவான கருத்தை கொண்டிருப்பதாக இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்த ஆண்டிற்கான ராய்சினா உரையாடல் நிகழ்ச்சியில் தொடக்கவுரையாற்ற ஒப்புக்கொண்ட ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட துறைகளில் இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறு உள்பட, பருவநிலை மாற்றம் சார்ந்த அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவான பேச்சு நடத்தினர். கோவிட்-19 ஏற்படுத்தி வரும் தொடர் சவால்கள் குறித்தும் விவாதித்த அவர்கள், உலகின் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி மற்றும் சிகிச்சைகள் சமமாக கிடைப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தினர்.

இதுதவிர, உக்ரைன் நிலவரம் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய முன்னேற்றங்கள் உள்பட முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு புவி-அரசியல் விவகாரங்கள் குறித்தும் இந்த கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.