புதுடில்லி: ராஜஸ்தான் மாநில அமைச்சர் மகன் மீது பாலியல் புகார் தெரிவித்த பெண் மீது மை வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில் அமைச்சராக இருப்பவர் மகேஷ் ஜோஷி. இவரது மகன் ரோகித் ஜோஷி மீது, பெண் ஒருவர் டில்லி போலீசில் பாலியல் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து அவரை கைது செய்ய டில்லி போலீசார் ராஜஸ்தான் சென்றனர். ஆனால், ரோகித் ஜோஷி தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், டில்லி நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்கியது. இதனையடுத்து நேற்று அவர் டில்லி போலீசார் முன்பு விசாரணைக்காக ஆஜரானார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண், டில்லியில் கலிந்த் குஜ் சாலையில் தாயாருடன் நடந்து சென்ற போது, மர்ம நபர்கள் இரண்டு பேர் ஊதா இங்க் போன்ற திரவத்தை அவர் மீது வீசிவிட்டு தப்பி சென்றனர். தகவல் அறிந்த போலீசார், விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பி சென்ற குற்றவாளிகளை சிசிடிவி கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர்.
Advertisement