அந்தமானில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் முதல் பரிசுகளை வென்ற கோவையை சேர்ந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்தமானில் 6 வது தேசிய அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த யோகா போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக, குஜராத், மகாராஷ்டிரா, அசாம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதில், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என 4 பிரிவுகளில் நடைபெற்ற யோகா போட்டியில் தமிழகம் சார்பாக கோவையில் இருந்து ஓசோன் யோகா சென்டர் பயிற்சியாளர், பாலகிருஷ்ணன் தலைமையில் சிறுமிகள், பெரியவர்கள் என 10 பேர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் 6 பேர் முதல் பரிசுகளையும், ஒருவர் இரண்டாம் பரிசையும், 3 யோகா ஆசிரியர்கள் அனைத்து விதமான யோகா சாம்பியன்ஷிப் பட்டத்தையும் பெற்றுள்ளனர். இந்நிலையில் பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாணவ, மாணவிகளின் வரவேற்ற பெற்றோர்கள் இனிப்புகள் கொடுத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
