உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரமாண்டமான முறையில் மால் ஒன்றை லூலு குழுமம் திறந்தது என்பதும் இந்த மாலை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடந்த 10ஆம் தேதி திறந்து வைத்தார் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் உத்தரபிரதேச லூலு குழுமத்தின் மால் திறக்கப்பட்ட நான்கே நாட்களில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையை அடுத்து லூலு குழுமத்தின் நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
இந்த புகாரில் தங்களுடைய மால் வளாகத்தில் ஒரு சிலர் நமாஸ் செய்ததாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லூலு மால்
ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாக கொண்ட லுலு குழுமம் உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோவில் புதிதாக திறக்கப்பட்ட மாலின் திறந்த பகுதியில் சிலர் நமாஸ் செய்யும் வீடியோ வைரலானதை அடுத்து லூலு குழுமம் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வழக்கு
லூலு குழுமத்தின் வணிக வளாகத்தின் ஷாப்பிங் அரங்கில் ஒரு குழு மக்கள் தொழுகை நடத்துவதை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதனை அடுத்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. லக்னோவில் உள்ள சுஷாந்த் கோல்ஃப் நகர காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் இதுகுறித்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாகவும், காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஹனுமான் மந்திரம்
இதுகுறித்த வீடியோ வைரலானதும் இந்து வலதுசாரி குழுக்களிடமிருந்து கடுமையான கண்டனங்கள் குவிந்தன. மேலும் வணிக வளாகத்தில் நமாஸ் செய்ய அனுமதி வழங்கினால், அதற்கு எதிராக ‘ஹனுமான் மந்திரம் கூறும் போராட்டத்தை நடத்துவோம் என்று இந்து மகாசபா எச்சரித்தது.

இந்து மகா சபை கண்டனம்
“ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாலில் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல் மால் அதிகாரிகள் இந்துக்கள் மற்றும் பிற சமூகத்தினரை பிரார்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும்,” என்று இந்து மகாசபாவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சிஷிர் சர்துர்வேதி தெரிவித்தார். மேலும் லூலு குழுமத்திற்கு எதிராக அந்த அமைப்பு போலீசிலும் புகார் அளித்துள்ளது.

லவ் ஜிகாத்
மால் ஊழியர்களில் 70 சதவீதம் பேர் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த ஆண்கள் என்றும் மீதமுள்ள 30 சதவீதம் பேர் இந்து சமூகத்தை சேர்ந்த பெண்கள் என்றும் இந்து மகா சபை குற்றம் சாட்டியுள்ளதோடு அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் லவ் ஜிகாத் செய்கிறார்கள்’ என்று அந்த புகாரில் மேலும் கூறப்பட்டுள்ளது. காவல்துறையினர் இந்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளனர் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

லக்னோ உள்ள லுலு மால்
2.2 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த வணிக வளாகத்தை, ஜூலை 10ஆம் தேதி முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார். இதில் 15 சிறந்த உணவகங்கள் மற்றும் 1,600 பேர் அமரக்கூடிய திறன் கொண்ட 25 பிராண்ட் விற்பனை நிலையங்களை கொண்ட ஒரு பெரிய உணவு அரங்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

புதிய மால்கள்
கேரளாவைச் சேர்ந்த என்ஆர்ஐ தொழிலதிபர் எம்ஏ யூசுபலிக்கு இந்த மால் சொந்தமானது ஆகும். மத்திய கிழக்கில் பரவியுள்ள இந்த குழு இந்தியாவில் கொச்சி, பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் திருச்சூரில் நான்கு மெகா மால்களை கொண்டுள்ளது. மேலும் லூலு குழுமம் அகமதாபாத், சென்னை, ஹைதராபாத் மற்றும் புதுடெல்லி உட்பட இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் புதிய மால்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது.
After Video of Namaz at Lulu Mall Went Viral, Police Registers FIR!
After Video of Namaz at Lulu Mall Went Viral, Police Registers FIR!