மாநிலங்களவையில் முதல் வாரம்: 18 மணி நேரம், 44 நிமிடம் வீண்

புதுடெல்லி: மழைக்கால கூட்டத் தொடரின் முதல் வாரத்தில் மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் இடையூறு, ஒத்திவைப்பு காரணமாக 18 மணி நேரம், 44 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டு இருப்பதாக மாநிலங்களவை செயலாளர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது. விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால், கடந்த 18ம் தேதி முதல் இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகின்றன.  இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மாநிலங்களவையின் செயல்பாடு குறித்து இந்த அவையின் செயலாளர் நேற்று கூறுகையில், ‘மாநிலங்களவையில் முதல் மூன்று நாட்களில் ஒரு மணி நேரம் 16 நிமிடங்கள் மட்டுமே பயனுள்ளதாக செலவிடப்பட்டுள்ளது. கடைசி 2 நாட்களில் இது 5 மணி நேரம் 31 நிமிடங்களாக அதிகரித்தது. அவையின் மொத்த நேரத்தில் 18 மணி நேரம், 44 நிமிடங்கள் இடையூறு மற்றும் ஒத்திவைப்பு காரணங்களால் வீணாகியுள்ளது. வாரத்தின் கடைசி நாளில் தனிநபர் மசோதா மீது இரண்டரை மணி நேரம் விவாதம் நடந்தது. இந்த விவாதம், அவையின் மொத்த செயல்பாடு நேரத்தை 37 சதவீதம் அதிகரிக்க உதவியுள்ளது. கடைசி 2 நாட்களில் ஒரு மணி நேரம், 50 நிமிடங்கள் மட்டுமே கேள்வி நேரம் நடைபெற்றுள்ளது. இது, அவையின் மொத்த செயல்பாட்டில் 27 சதவீதமாகும்,’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.