'கனத்த இதயத்துடன் ஷிண்டேவை முதல்வர் ஆக்கினோம்' – பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை!

மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக, கனத்த இதயத்துடன், ஏக்நாத் ஷிண்டேவை ஆக்கினோம் என, அம்மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் தெரிவித்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு, போர்க்கொடி தூக்கினார். இதனால் அதிருப்தி அடைந்த உத்தவ் தாக்கரே, பெரும்பான்மை இல்லாததை உணர்ந்து, முதலமைச்சர் மற்றும் எம்எல்சி பதவியை, ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து, சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைக்க முடிவு செய்தார். இதன்படி, பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் முதலமைச்சராகவும், ஏக்நாத் ஷிண்டே துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்பார்கள் என, முதலில் தகவல் வெளியாகியது. ஆனால் அதிரடி திருப்பமாக, மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக, ஏக்நாத் ஷிண்டே பதவியேற்ற நிலையில், துணை முதலமைச்சராக, தேவேந்திர பட்னவிஸ் பதவி ஏற்றார்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக, கனத்த இதயத்துடன், ஏக்நாத் ஷிண்டேவை ஆக்கினோம் என, அம்மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் தெரிவித்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று நடந்த பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய சந்திரகாந்த் பாட்டில், “நெக்கடியான இந்த சூழலில் நல்ல வலுவான தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு இருந்தது. நாங்கள் பட்னவிஸ் தான் முதல்வர் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் பட்னவிஸ் மற்றும பாஜக தலைமை இருவரும் கனத்த இதயத்துடன் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்க முடிவு செய்தனர். இந்த முடிவு எங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. எங்களது கவலையை மறைத்துக் கொண்டு தான் அரசாங்கம் அமைக்கும் முடிவை ஏற்றோம்” என்று கூறினார்.

சந்திரகாந்த் பாட்டில் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து விளக்கம் அளித்த தேவேந்திர பட்னவிஸ், “சந்திரகாந்த் பாட்டிலின் கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளன. அவர்கள் எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை என்ற ஆதங்கத்தைத் தான் அவர் கூறினார். அது திடீரென்று எடுக்கப்பட்ட முடிவு இல்லை. அனைவரும் முன்பே கலந்தாலோசித்து ஒருமித்த கருத்துடன் தான் முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.