புதுடில்லி: 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பை ஏற்று மத்திய அமைச்சர்கள், அரசியல்கட்சி தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் தேசிய கொடியை ஏற்றினர். எங்கு பார்த்தாலும் தேசிய கொடியாகவே தெரிகிறது.
இந்தியாவின், 75வது சுதந்திர தினத்தை கொண்டாட, நாட்டு மக்கள் தயாராகின்றனர். அமுத பெருவிழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 13 முதல் 15 வரை, ‘வீடு தோறும் மூவர்ணம்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அதை செயல்படுத்தும்படி, மாநிலங்களுக்கு அழைப்பு விடுத்தார். இதற்காக பல்வேறு மாநில அரசுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொது மக்களுக்கு தேசிய கொடிகள் விநியோகிக்கும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளை ஏற்று மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள், நடிகர்கள் பலர் என தேசிய கொடி ஏற்றி வருகின்றனர். நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் தேசிய கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினர். எங்கு பார்த்தாலும் தேசிய கொடியாகவே தெரிகிறது. ஏராளமானோர், தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றியதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
டில்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது மனைவியுடன் இணைந்து தேசிய கொடி ஏற்றினார். பின்னர் அவர், மோடியின் அழைப்பை ஏற்று மக்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்றார்.

தமிழக எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான பழனிசாமி , தனது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், பனாஜியில் உள்ள தனது வீட்டில் தேசிய கொடி ஏற்றினார்.

இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் எல்லை பகுதியில் தேசிய கொடி ஏற்றினர். சீன எல்லையோரத்தில் வசிக்கும் மக்களிடையே, நாட்டு பற்றை ஏற்படுத்தும் வகையில் தேசிய கொடி ஏற்றியதுடன், தேசபக்தி பாடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் மோகன் லால், கொச்சியில் உள்ள தனது வீட்டில் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் அவர், வீடு தோறும் மூவர்ணம் என்ற பிரதமரின் அழைப்பை மதித்து மக்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும். இந்த அமுத விழா, மக்களிடம் தைரியத்தையம், தேசபக்தியுடன் முன்னேற நம்மை ஊக்குவிக்கட்டும் என்றார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டில் தேசிய கொடி ஏற்றினார்.

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தனது வீட்டில் தேசிய கொடி ஏற்றினார்.
அதேபோல், அசாம் தலைநகர் கவுகாத்தி, உத்தரகண்ட் தலைநகர் டேராடூன் உள்ளிட்ட இடங்களில் தேசிய கொடியுடன் ஊர்வலம் நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement