சென்னை: ஆக.30-ம் தேதி நடைபெறுவதாக இருந்த தமிழக அமைச்சரவைக் கூட்டம், ஒருநாள் முன்னதாக 29-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தொழில்துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்காக அரசிடம் விண்ணப்பித்துள்ளன. இந்த நிறுவனங்களுக்கு அனுமதியும் சலுகைகளும் வழங்குவது குறித்து முடிவு எடுப்பதற்காக தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக. 30-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, அரசு அலுவல்கள் காரணமாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் நாள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஆக.30-க்கு பதில் ஒருநாள் முன்னதாக ஆக.29-ம் தேதி மாலை 6 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. இதில், ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசரச் சட்டம், பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம் உள்ளிட்டவற்றுக்கான ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிகிறது.