தைரியமிருந்தால் கைது செய்யுங்கள்: மம்தா பானர்ஜி சவால்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பார்த்தா சட்டர்ஜி, அனுப்ரதா மோண்டல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொல்கத்தாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ‘‘பாஜ அனைவரையும் திருடர்கள் என்று முத்திரை குத்துகிறது. திரிணாமுலில் உள்ளவர்கள் அனைவரும் திருடர்கள் போலவும் பாஜவும் அதன் தலைவர்களும் புனிதமானவர்கள் போலவும் பிரசாரம் செய்கின்றனர். நான் மட்டும் அரசியலில் இல்லாதிருந்தால் அவர்களின் நாக்கை அறுத்திருப்பேன்.

இந்தியா முழுவதும் காவி கட்சி அல்லாத மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை அகற்ற பாஜ, தவறாக சம்பாதித்த பணத்துடன் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகளைப் பயன்படுத்துகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை அகற்ற பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான கோடிகள் எங்கிருந்து கிடைக்கின்றன என பாஜ பதில் அளிக்க வேண்டும். ஏனெனில் அந்த கட்சி, ஹவாலா மூலம் வெளிநாடுகளில் பணத்தைக் குவித்து வருகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்போம்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.